அடையார் ஆனந்த பவன் முன்னாலே பிச்சைக்காரர் பவ்யமாக கை நீட்டி
வசனம் "பசி, பட்டினி, துன்பம், துயரம், துலாபாரம்"
அடையாரில் இருக்கும் இந்த அடையார் ஆனந்த பவன் தான் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாம். ஒட்டியே முதலாளி பங்களா.
பங்களாவுக்கும் ஆனந்த பவனுக்கும் நடுவில் ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
அப்பல்லோ மெடிக்கல்ஸ் போய் மருந்து வாங்கிக் கொண்டிருக்கையில் அதே 'பசி பட்டினி, துன்பம், துயரம், துலாபாரம் 'அங்கே ஆஜர்.
Body language இப்ப வேற லெவல்.
"எரநூறு ரூபாக்கு பத்து, இருபது ரூபா சில்லறை இந்தா. முழு எரநூறு நோட்டு குடு"
அவரை உற்றுப் பார்க்காமல் இருக்க முடியுமா?
கல்லாவில் இருந்த பெண் பத்து இருபது ரூபா நோட்டுகள செக் பண்ணிட்டு எரநூறு முழு நோட்டு கொடுக்கிற நேரத்தில் பர்ஸில் கத்தையா இருந்த நூறு ரூபாய் நோட்டுகள பிச்சைக்காரர் எண்ணினார்.
இந்த நோட்டையும் பர்ஸில் வைத்து விட்டு
நிமிர்ந்த நன்னடை, நிமிர்ந்த பார்வையுடன் நடந்தவர் கதவை திறந்து வெளியேறு முன் திரும்பி என்னை மேலும் கீழுமாக பார்வையால் அடித்து பார்த்து பார்த்து சத்தமாக சொன்னார் "வர்ரேன் தலைவரே"
இந்தாள செல்ஃபி எடுக்காம விட்டாச்சே. சே.. மிஸ்ஸாயிடுச்சி. அடையார் ஆனந்த பவன் முன்னாலேயாவது எடுத்திருக்கலாம்.
"பிச்சை எடுப்பவர் ஒட்டகத்தில் அமர்ந்து பிச்சை கேட்டாலும் விருப்பமிருந்தால் கொடுங்கள்..இல்லையென்றால் அமைதியாக கடந்து சென்று விடுங்கள்"
- நபிமொழி.
அனா, ஆவன்னா...
ஒட்டகத்தில் வந்து பிச்சையெடுத்தால் கடந்து போய் விடலாம்.
எலியட்ஸ் பீச்சிலே, அடையார் ஆனந்த பவன்ல நச்சரிப்பு தாங்க முடியவில்லை. குளித்து விட்டு வந்து யாரும் பிச்சை எடுப்பதில்லை. கந்தையானாலும் கசக்கிக்கட்டாமல்,
ரொம்ப அழுக்காக 'பசி, பட்டினி, துன்பம் துயரம் துலாபாரம்'கெஞ்சல். ஆலிங்கனம் பண்ணாத குறை தான். நெருங்கி கையால் தொட்டு, தொட்டு தான் கேட்கிறார்கள்.