நள்ளிரவு 2 மணி. ஆதம்பாக்கத்திலிருந்து டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
டாக்ஸி டிரைவர் சொன்ன ஒரு விஷயம்.
அவருடைய தகப்பனார் சகோதரர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் ஏழு பேர் உடன் பிறந்த சகோதரிகள். ஆக அண்ணன் தம்பிகள் ஏழு பேர் மனைவியர் கூட ஒரு தாய் மக்கள்.
இந்த செய்தி சற்று அதிசயமாக, ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
ஆனால் இதை விட ஒரு ஆச்சரியமான, அதிசயமான செய்தி ஒன்றை அவர் சொன்னார்.
முப்பது வருடங்களுக்கு முன் நடந்த துயரம்.
அண்ணன் தம்பிகள் ஏழுபேரும் அவர்கள் மனைவியர் ஏழு பேரும் ஒரே ஆண்டில் இறந்திருக்கிறார்கள்.
விபத்தா என்றால் இல்லை. தற்கொலையா என்றால் அதுவும் இல்லை.ஒரு பெரியப்பா இறந்திருக்கிறார். உடனே சில நாட்களில் பெரியம்மா இறந்து போய் விட்டார். அடுத்தடுத்து உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மற்ற தம்பதியர்களும் குறிப்பிட்ட வரிசை என்று இல்லாமல் இறந்திருக்கிறார்கள்.
பதினான்கு மரணங்கள் ஒரே ஆண்டில் நடந்து முடிந்து விட்டிருப்பது விந்தை.
அப்போது அந்த வருடம் இந்த டிரைவர் அய்யனார் திருமணமாகிய புதிது.
புது மாப்பிள்ளை.
குடும்பத்தில் ஒரு மரணத்தை தாங்கிக்கொள்வதே சித்ரவதை. தொடர்ந்து துக்கம். தந்தை, தாய், பெரியப்பா, பெரியம்மா சித்தப்பாக்கள் எல்லோரும் ஒரே ஆண்டில் இறந்த துயரத்தை பார்க்கும் துர்பாக்கியம்.
இப்படி ஒரு கதையில்,சினிமாவில் சம்பவங்கள் என்றால் கூட மிகையாகத்தான் தெரியும்.
……………………………….