பள்ளிப்படிப்பின் போது அடிக்கடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். மொத்தத்தில் ஒரு இருபது தடவைகளாவது வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறேன்.
சிறுவனாக நான் வில்லுப்பாட்டு பிரமாதமாக பாடி பேசி நடிப்பதாக எல்லோரும் அப்போது சொல்வார்கள்
கல்லூரி காலத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வாய்ப்பே கிட்டவில்லை. அந்நியமாகி விட்டது.
பால் பருவத்து என் வில்லுப்பாட்டு அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. பாடல் வரிகள்.
“தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள் சந்தான தெய்வமே
சந்தத்தோடு பானை தாளம்
சித்துடுக்கை பம்பையுடன்
பஞ்ச பூதங்கள் அழித்த
பரமன் கதை நானுரைக்க
பாதக மானிடன் மீட்பை
பாங்குடனே நான் விளக்க
வந்தெனக்கு துணையிருப்பாள்
துர்க்கையம்மனே
அந்த வடிவழகி பாதம் போற்றி!”
” பாடறியேன் படிப்பறியேன்
அந்த பாட்டிலுள்ள பொருளறியேன்
பாடறியா நாளையிலே
என்னை படிக்க வைத்தார்
என் தாய் தந்தையர்
படிக்காமலே தறுதலையாய்
நான் ஊர் சுற்றினால் என்ன செய்வார்?
நான் ஒரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நினைவொரு நாள் மறப்பதில்லே
என் நினைவொரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நெஞ்சொரு நாள் மறப்பதில்லே”
’இந்த பாடறியேன் படிப்பறியேன்’ என்ற ஆரம்ப வரி பின்னால் இளையராஜாவால் சிந்து பைரவியில் நாட்டுப்புற பாடலாக பிரபலமானது.
நடிகர் எஸ்.எஸ்.ஆர் பல காலம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நிகழ்ச்சி பார்க்க கிடைத்ததில்லை. எஸ்.எஸ்.ஆரையே நான் நேரில் பார்த்ததில்லை.
’வில்லடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை’ என்ற அளவிற்கு கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ரொம்ப காலத்திற்கு இருந்திருக்கிறது.