Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

தேவிகா

$
0
0

கமல் ரஜினி காலம் ஆரம்பித்து பிரமாதமாக இருவரும் கொடி கட்டிவிட்ட காலம். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம்......

மதுரை தேவி தியேட்டரில் பழைய படம் “பாவ மன்னிப்பு” பார்க்க என் நண்பன் சரவணனுடன் போயிருந்தேன்.

தேவிகா படத்தில் வந்தவுடன் கை தட்டல். பால்கனியில் கூட கை தட்டி ரசிக சுள்ளான்கள் ஆர்ப்பரித்தார்கள்.தேவிகா வருகிற காட்சிகளிலெல்லாம் பலமான வரவேற்பு. இப்படி தத்தனேரி,விளாங்குடிடூரிங் டாக்கீஸ்களிலும் பார்த்ததுண்டு.
தேவிகா யாரோ ஒரு ரொம்ப பழைய மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக் காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

 
“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா உயிரே விலகத்தெரியாதா” மாஸ்டர் பீஸ்!

“சொன்னது நீ தானா? சொல்,சொல் என்னுயிரே”

“பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது”

“உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.”

“ராமனுக்கே சீதை என்று வாழ்வது தான் பெண்மை, சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை”

“ஆயிரம் பெண்மை மலரட்டுமே, ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே”

சுசிலாவின் இந்தப்பாடல்களெல்லாம் தேவிகாவால் காட்சியாகின.

பின்னால் பிரபலமான கே.ஆர்.விஜயா நாடகத்தனமான நடிகை.
“தூக்கணாங்குருவிக்கூடு, தூங்கக்கண்டா” என்ற தேவிகாவின் பாடலைப்பார்த்து விட்டு கே.ஆர்.விஜயாவின் “ தமிழுக்கும் அமுதென்று பேர்” பாட்டைப் பார்த்தால் தேவிகாவின் அருமை புரியும். கே.ஆர்.விஜயா பாரதி தாசனின் பாடலில் செய்யும் கொனஸ்டைகள் சகிக்காது.


தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகி மறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்த சிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.

கண்ணதாசன் மதித்த நடிகைகளில் தேவிகா முக்கியமானவர். வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.


தேவதாஸ் இயக்கிய “வெகுளிப்பெண்” தேவிகா,வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து வெளி வந்தது.

தேவிகா தேவதாஸ் பிரிந்த பின்னால் ஒரு குடியரசு தினத்தில் தேவதாஸ் வாழ்ந்த வீட்டிற்கு அப்துல்லாவோடு போயிருந்தேன்.அப்துல்லாவின் உறவினர் சுல்தானும் தேவதாஸோடு பீம்சிங்கிடம் இருந்தவர்.

நான் பங்களாவிற்குள் நுழைந்தபோது தேவதாஸ் அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தார். சுல்தான் கத்திரிக்காயில் காம்பு கிள்ளியெடுத்துக்கொண்டிருந்தார்.

டிரான்ஸிஸ்டர் சைசில் ஒரு போர்ட்டபிள் டி.வி.யில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நேரடியாய் ஒளிபரப்பு. குத்துச்சண்டை வீரர் முகமது அலி அந்த குடியரசு தினத்தில் முக்கிய விருந்தினர்.

தேவிகாவிற்கு காலங்கடந்தும் நிறைய ரசிகர்கள் இருப்பதை நான் குறிப்பிட்ட போது தேவதாஸ் அது பற்றி மிகுந்த பெருமைப்பட்டார்.


கனகா நடிகையானவுடன் தேவிகா ரொம்ப ஜபர்தஸ்து. அம்மாவை சமாளிக்க முடியாமல் சினிமாவுலகம் திணறியதாகச் சொல்வார்கள்.
தலைசிறந்த கதாநாயகியாக தேவிகாவை அறிந்தவர்களுக்கு கனகாவின் அம்மாவாக வித்தியாசமாக ஒரு பிம்பம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மாமனாரின் அண்ணன் வீட்டில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிசயப்பிறவி படம் டி.வியில்.
"மருமகனே! இவ யாரு!"

"கனகா. தேவிகா மக!"

உடனே என் பெரிய மாமனார் எங்களுடன் அமர்ந்திருந்த அவருடைய அக்கா மாப்பிள்ளையிடம்  பதறிப்போய் சொன்னார்.
"அத்தான்! தேவிகா மக நடிக்க வந்துட்டான்னா நமக்கெல்லாம் வயசாயிடுச்சின்னுல்ல அர்த்தம்!?"

.........



தேவிகாவின் குடும்ப நண்பர் ஒருவரிடம் நடிகையாக அவரின் விஷேச அம்சங்கள் பற்றி விலாவரியாக பேசிவிட்டு “ தேவிகாவின் ரசிகன் நான்.” என்றேன். அவர் “இதையெல்லாம் நான் தேவிகாவிடம் சொன்னால் அவர் பதில் என்ன தெரியுமா! ‘அவன் எந்த பய. காட்டுப்பய’ என்பது தான்!”

தேவிகாவை மென்மையும் பெண்மையுமாக திரையில் கண்டிருந்த எனக்கு இந்த உண்மை பெரும் முரணாகத் தெரிந்தது!


.................................................

Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>