எம்.ஜி.வல்லபன் பத்திரிக்கையாளர். சினிமாப் பாடலாசிரியர். ”மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” பாடலை எழுதியது வல்லபன் தான். ’ஃபிலிமாலயா’ சினிமாப்பத்திரிக்கையாசிரியராயிருந்தார். அதில் ரொம்பப் பரபரப்பான சந்திரபாபுவின் ’மாடி வீட்டு ஏழையின் கதை’யை எடிட் செய்து எழுதியவர்.
ஃபிலிமாலயாவின் எடிட்டராயிருக்கும்போதே பின்னால் ’தைப்பொங்கல்’ என்ற ஒரே ஒரு படத்தை இயக்கினார்.
எம்.ஆர். ராதிகா, பட்டாளத்து விஜயன், ராஜேஷ் ஆகியோர் நடித்த படம்.
”பனி விழும் பூமலரில் பாவை நீ கண் மலர்ந்தாய்” என்ற பாடல் ராஜேஷுக்கும் ராதிகாவுக்கும். இளையராஜா இசை.
தயாரிப்பாளர் சரியில்லாத மனிதர்.
’தைப்பொங்கல்’ படம் utter flop!
மிக மோசமான இயக்கம். இத்தனைக்கும் வல்லபன் மீது அப்போது ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது.
...............
’ராசுக்குட்டி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ’பாக்யா’ ஆஃபிசில் அந்தப் பத்திரிக்கையில் அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி. வல்லபனைப் பார்த்த போது சொன்னேன்.
” உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன சம்பந்தம் இருக்கிறது.”
அவருக்குப் புரியவில்லை. நீங்கள் எடுத்த ’தைப்பொங்கல்’ படத்தில் ராதிகாவின் வீட்டில் தியாகராஜ பாகவதரின் பாடல் ரேடியோவில் ஒலிப்பது போல வரும் காட்சியில் பயன் படுத்தப்பட்ட கேஸட் என்னுடையது தான்! அதை நீங்கள் திருப்பித்தரவில்லை.” என்று சிரித்தவாறு சொன்னேன். அவருக்கு முகத்தில் தெளிவு ஏற்பட்டு “ஆமாம்! எனக்கு நினைவிருக்கிறது. அதை டப்பிங்கில் உபயோகப்படுத்திய பின் தொலைந்து போய் விட்டது.” என்றார்.
அந்த நேரத்தில் MKT ஆடியோ கேஸட்டை இழந்தது ரொம்ப வருத்தமாகத்தான் இருந்தது. தைப்பொங்கல் படத்தின் டப்பிங்கில் பயன்படுத்துவதற்காக அந்தப் படத்தில் நடித்த மற்றொரு நடிகரிடம் நான் இந்தக் கேஸட்டைத் தரும்போது ரொம்ப ஸ்டிரிக்டாக ’கட்டாயம் பத்திரமாகத் திருப்பித் தந்து விட வேண்டும்’ என்று கறாராகச்சொல்லியிருந்தேன்.
காடையைக் காட்டில் விட்டால் திரும்பப் பிடிக்கவா முடியும்?