Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1892 articles
Browse latest View live

கல்லு மனசு

$
0
0

  ந.முத்துசாமிக்கு ’பெருந்தமிழர்  விருது’ ஆனந்த விகடன் வழங்கிய விழாவிற்கு போயிருந்த போது உட்காரு முன் ’அருவி’ அதிதி பாலனை சந்தித்தேன்.

அதிதியை சந்திக்க வாய்க்கும் என்று நினைத்தே பார்த்திராத எனக்கு Pleasant Surprise.
Serendipitious Happy Discouvery!


https://www.facebook.com/rprajanayahem/posts/2104553959758059?pnref=story

தோரணையும் அகங்காரமுமாகவே பல நடிகைகளை பார்த்திருக்கிறேன்.
உட்கார்ந்து பேசும் போது அதிதி தெய்வசந்நிதானத்தில் அமர்ந்திருப்பது போல என்னை கை கூப்பி, கண் மூடி, தலை வணங்கி மரியாதை செய்து கொண்டேயிருந்தார்.
" You will see greater things in your life"என்று நான் ஆசி வழங்கினேன்.
.......................................


அருவி படம் பார்க்க என் மனைவியை அழைத்துச் சென்றிருந்தேன். சிரிக்க வேண்டிய காட்சிகளில் சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் என் திருமதி. கடைசியில் கண் கலங்கி கண்ணீர் விட்டுக்கொண்டு.....
” என்னம்மா?” என்று நான் கேட்டேன்.
மீண்டும் அழுது கொண்டே தான் இருந்தார்.
நான் அழாமல் இருக்கிறேன் என்பதற்காக எனக்கு Compliment வேறு!
“கல்லு மனசுங்க உங்களுக்கு...கல்ல்லு மனசு. “

சிலோன் மனோகர்

$
0
0

சிலோன் மனோகர் பாசநிலா என்ற இலங்கை படத்தில் நடித்து விட்டு சாவகாசமாக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்து சேர்ந்தவர். அப்போதே அவருக்கு படிக்கிற வயது தாண்டி விட்டது.

ஜோசப் பள்ளி சிறுவர்கள் இவரை பார்த்து ’பாசநிலா பாசநிலா’ என்று கத்திக்கொண்டே பின்னால் வரும் போது “ தம்பிமார்களே, என்னை விட்டு விடுங்களப்பா” என்று கூச்சத்தோடு கெஞ்சுவார்.

நாடகம் ஒன்றில் கொள்ளைக்கூட்ட பாஸ் ஆக நடித்து உயிர் விடுகிற காட்சி கல்லூரி, பள்ளி மாணவர்களால் ரசிக்கப்பட்டது.

சிவாஜி நடித்த ’ஞான ஒளி’ சுந்தர்ராஜனும் அவர் தாய்மாமன் வீரராகவனும் நடித்த பிரபல நாடகம்.
ஞான ஒளி நாடகம் மாணவர்களால் கல்லூரியில் லாலி ஹாலில் மேடையேற்றப்பட்டது.
அதில் சிலோன் மனோகர் கதாநாயகன் ஆண்டனி பாத்திரத்தில் நடித்தார்.

படிக்கிறதாக பேர் செய்து கொண்டு கவனமெல்லாமே சினிமா மீது தான்.
தேவரின் ’மாணவன்’ படத்தில் சிலோன் மனோகருக்கு ஒரே ஒரு வசனம் உண்டு. “மணி தான் சார்”
குட்டி பத்மினியும் கமலும் பாடும் “விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா” பாட்டு முடியும்போது குட்டி பத்மினி மீது ஒரு மாணவன் பாம்பை வீசுவான். குட்டி பத்மினி பயந்து கத்தி மயங்கி விழுந்து விடுவார். அப்போது ஜெய்சங்கர் “யார் இந்த காரியத்தை செய்தது?” என்று பதற்றத்துடன் கேட்கும்போது சிலோன் மனோகர் தான் போட்டுக்கொடுப்பார் “ மணி தான் சார்.”
ஜோசப் பள்ளி மாணவர்கள் பாசநிலா என்று கத்துவதை நிறுத்தி விட்டு மனோகரை பார்க்கும்போது “மணிதான் சார்” என்பார்கள்.

ஜெய்சங்கர் மாணவனாக இருக்கும்போதும் சிலோன் மனோகர் மாணவராக வருவார். ஆசிரியராக ஜெய்சங்கர் வரும்போதும் மாணவராக வருவார். ‘ஒரு க்ளப் டான்ஸ்’ காட்சியிலும் வருவார். ’மாணவன்’ படத்தில் ஜெய்சங்கரும், முத்துராமனும் மாணவர்களாக வரும்போது அவர்களுடன் காமெடியன் பாண்டு கூட மாணவன்.
செயிண்ட் ஜோசப் சர்ச் கொயரில் சிலோன் மனோகர் முக்கிய பாடகர். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
சிலோன் மனோகர் அந்தக்காலங்களில் சிவாஜி கணேசனின் வெறி பிடித்த ரசிகர்.
சிவாஜி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அப்படித்தான்.

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு,

ஏழு கடல் சீமை, அதை ஆளுகின்ற நேர்மை, இவர் எங்க ஊரு ராஜா,

சொல்லாதே யாரும் கேட்டால், சொன்னாலே தாங்க மாட்டார்,

காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்

போன்ற பாடல்களை உற்சாகமாக பாடுவார்.
எம்.ஜி.ஆர் பாட்டே சிலோன் மனோகர் பாட மாட்டார்.

சினிமா அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
’மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து இவர் பாடிய பாடல் “ மாமா, மனசு இப்போ நல்லால்லே, ஆமா, சரக்கு ஒன்னும் சரியில்லே.”

சிவாஜியின் ரத்த பாசத்தில் நடித்த நடிகை லிசாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரையும் விஜயாவாஹினியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சாய்பாபா ஹேர்ஸ்டைலில் இருப்பார். நான் மனோகரை ’பாஸ்’ என்றே கூப்பிடுவேன். எனக்கு பாஸ் என்பதல்ல. பாஸ் என்பது தான் திருச்சி செயிண்ட் ஜோசப்பில் பட்டப்பெயர்.

இரண்டாம் ரக வில்லனாக சில படங்களில் நடித்தார்.
குடிப்பழக்கம் உண்டு. ரொம்ப குடித்தார்.
ரொம்ப கோபப்படுவார் என்றும் அம்ஜத்குமார் சொல்லியிருக்கிறான். இந்த அம்ஜத்குமார், தான் திரைப்படங்களில் கற்பழித்த நடிகைகள் கே.ஆர்.விஜயா துவங்கி எத்தனை பேர் என்று புள்ளி விபரமாக சொல்வான்.
வாடைக்காற்று என்ற இலங்கை தமிழ் படத்திலும் மனோகர் நடித்திருக்கிறார். ”வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” பாடல்.
பாப் பாடகராக ரொம்ப பிரபலமானார். சுராங்கனி, சுராங்கனி… உலகம் முழுவதும் சென்று பாப் கச்சேரி நடத்தியவர்.
கச்சேரியில் சர்ச் பாடலையும் பாடுவார்: ”மாதாவே சரணம், உந்தன் பாதாரம் எமக்காதாரம், 
கன்னி மாதாவே சரணம் 
மாசில் உம் மனமும் சேசுவின் உளமும்
 மாந்தரின் தவறால் நோவுற கண்டோம், 
ஜெபம் செய்வோம், தினம் ஜெபமாலை செய்வோம், 
பாவத்திற்காக பரிகாரம் செய்வோம், 
கன்னி மாதாவே சரணம்” 

சரண் இயக்கி மாதவன், பூஜா நடித்த ’ஜே.ஜே’ படத்தில் கூட நடித்திருந்தார்.

டி.வி சீரியலில் நடித்தார்.



சென்னைக்கு நான் வந்த பின், எப்போதாவது, எங்காவது சிலோன் மனோகரை  மீண்டும் சந்திப்பேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

...............................................................

பாலியல் தொழிலாளி மற்றும் அர்த்தமுள்ள மதம்

$
0
0

பாலியல் தொழிலாளி

ஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.
..................
”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படியிருப்பினும், ’தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுத்த நியாயமே இல்லை.
வேண்டுமென்றால் தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையையோ அல்லது யூஜின் ஓநீலின் அன்னா கிருஷ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்…
பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.”
- ஜி. நாகராஜன்.
......................
இந்த யூஜின் ஒநீல் மகள் ஊனா ஓ நீல் தான்
"Catcher in the rye நாவல் எழுதிய ஜே.டி.சாலிஞ்சருடைய காதலி.
ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல் நூல் விட்டுக்கொண்டிருந்தார் சாலிஞ்சர்.
ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!
நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.
......................................................


அர்த்தமுள்ள மதம்

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ஜெயந்திர சரஸ்வதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து கர்ப்பக்ரகம் வரை வந்து சேவித்தார்.
அப்போது பட்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வைஷ்ணவ கோவிலில் காஞ்சி பீடாதிபதி வந்ததை அவ்வளவு சிலாக்கியமானதாக அவர்களால் ரசிக்க முடியவில்லை.
’கோவிலை தீட்டு நீக்க சம்ப்ரோக்ஷனம் செய்யவேண்டும்’ என்று பதற்றத்தை வெளிப்படையாக காட்டினார்கள்.

பாலசரஸ்வதி

$
0
0

நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி பற்றி ஒரு அருமையான வாழ்க்கை வரலாறு படிக்க கிடைத்திருக்கிறது. 
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். க்ரியா வெளியீடு என்பதே அதன் தரத்திற்கு சான்று.
டக்ளஸ் எம். நைட் என்ற அமெரிக்கர் எழுதிய நூல்.

விசேஷம் என்னவென்றால் இவர் பாலசரஸ்வதியின் மகள் லட்சுமியின் கணவர். இந்த நூலை மறைந்து விட்ட தன் மனைவி லட்சுமிக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
வீணை தனம்மாள் வம்ச பரம்பரையில் வந்தவர் பாலசரஸ்வதி. வீணை தனம்மாளின் மகள் ஜெயம்மாவின் மகள். ஒரு காலகட்டத்தில் தனம்மாள் “ நான் பாலசரஸ்வதியின் பாட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தும் நிலை வந்தது.
இந்தியாவின் முதல் நேரு மந்திரிசபையில் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பாலசரஸ்வதியின் துணைவர். லட்சுமியின் தகப்பனார். லட்சுமி சண்முகம் தான் டக்ளஸ் நைட்டின் துணைவி.
தன்னுடைய 18வது வயதில் பாலசரஸ்வதி தன் வாழ்க்கைத் துணைவராக ஆர்.கே. சண்முகம் செட்டியாரை வரித்துக்கொண்டார்.


........................................





வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls, it's quirky,funny and rebellious!
Great Dancer Balaasaraswathy and Outstanding singer M.S.Subbulakshmi in their teens!

.....................................

பரதநாட்டியம் பற்றி தி.ஜாவின் 'மலர் மஞ்சம் 'நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம்,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும்...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும், இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும். நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

..................

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.html







ஜோதிடம்

$
0
0

இலக்கிய வாசிப்பு மட்டும் என்றில்லை.
எண்பது ஜோதிட நூல்கள் படித்திருந்தேன். நியூமராலஜி பற்றியும் சீரோ, பண்டிட் சேதுராமன் துவங்கி நிறைய புத்தகங்கள் படித்திருந்தேன்.
ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதனால் மிகுந்த சிரமங்கள் எனக்கு ஏற்பட்டது.
பலருக்கும் நான் ஜோதிடம் பார்க்க வேண்டியிருந்தது.
வசதியான ஒரு உறவினர் தன் மகளுக்கு வந்த வரன் ஜாதகங்கள் என் கவனத்திற்கு வாராவாரம் கொண்டு வருவார். நான் பொருத்தம் பார்த்து எழுதி தருவேன். இலவசமாக. நான் பார்த்த ஜாதகங்களில் இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜாதகமும் ஒன்று.
“ இவன் ஐ.ஏ.எஸ். சரி தான். ஆனா வயசு ரொம்ப அதிகமாயிருக்கு” என்பார்.
ஐ.பி.எஸ்., டாக்டர் ஜாதகங்கள் நிறைய தருவார்.
பொருத்தங்கள் முழுமையாக இருந்தாலும் ஜாதகங்களை கழிக்க பல காரணங்கள் சொல்வார்.
” இவன் ஐ.பி.எஸ்.. சரி.. ஆனா இவன் அப்பன் சாதாரண ஆளாயிருக்கான். என் சம்பந்தின்னா எனக்கு சமமா அந்தஸ்து, செல்வாக்குள்ளவனா இருக்க வேண்டாமா? தொர.. என்ன நான் சொல்றது?”
வாரத்திற்கு பத்து ஜாதகத்திற்கு குறையாது.
அவருடைய ஜபர்தஸ்து பிரகாசமானது. Subtext கீழ்கண்டவாறு இப்படித்தான் இருக்கும்.
“இவன் கலெக்டர்.. சரி… சரி தான். ஆனா இவன் அப்பன்..? இந்தியாவில இருபத்தேழு ஸ்டேட் இருக்காது? ஒரு ஸ்டேட்டுக்கு கூட இவன் அப்பன் கவர்னரா இல்லயே? அட ஒரு முன்னாள் கவர்னரா இருந்தா கூட சரி தான்.”
ஜாதகம், நியூமராலஜி தொரக்கி தெரியும் என்ற செய்தி ரொம்ப வேகமாக உற்றார், சுற்றம், அறிந்தார் அனைவருக்கும் பரவியதால் நான் பெருந்தொல்லை சந்திக்க நேர்ந்தது.
ஒரு கல்யாண வீட்டிற்கு போனால் அங்கே சிலர் என்னிடம் ஜோதிடம் கேட்க ஆரம்பித்தார்கள். எழவு வீட்டுக்கு போனால் என்னை சுற்றி எதிர்காலம் பற்றி விசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஓசி என்பதால் எனக்கு ஒன்னு, எங்கப்பனுக்கு ரெண்டு.

பஜாருக்கு போனால் நகைக்கடை முதலாளி ஜோசியம் கேட்பார்.
“மைனர்! இவரு ஒங்க கிட்ட ஜாதகம் பாக்கனும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்சம் இங்கயே பாத்து சொல்லுங்க.” என்று கடையில் அமர்ந்திருக்கும் தன் நண்பருக்கு சிபாரிசு செய்வார்.
முகமறியா அந்த நபர் ஜாதகத்தை கொடுப்பார். விபரம் கேட்டுக்கொள்வார்.
மறு நாள் அவர் மீண்டும் என்னைப் பார்த்து தலையை சொறிவார்.
” என்னுடைய அம்மாவும் மனைவியும் உங்கள வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்கள். இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு. சிரமம்னு நினைக்காம வாங்க சார்..”
வீட்டுக்கு என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்வார். நாலு ஜாதகம் பார்ப்பதென்றால் ரெண்டு மணி நேரமாவது ஆகும்.
அதே நபர் ஒரு ரெண்டு மாதத்தில் மீண்டும் என்னிடம் பவ்யமாக கெஞ்சுவார். ”கோயம்புத்தூருல இருந்து என்னோட அக்காவும் அக்கா மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. மச்சானுக்கு கொஞ்சம் சிக்கல். ஒங்க கிட்ட ஜாதகத்த காண்பிக்கணும்னு சொல்றார்.”
பேரு மாத்தணும்.. நியூமராலஜி பாக்கணும்… நான் கார் வாங்கணும்..எஸ்டேட் வாங்கணும்னு என் உயிர எடுத்திட்டானுங்க.

ஓசின்னா தான தொந்தரவுன்னு ‘துரை சஹா ஜோதிட சாஸ்த்ரம்’னு சின்னக்கடை வீதியில போர்டு போட்டு ஒக்காந்தேன். ஃபைனான்ஸ் தொழில் செய்து கொண்டிருந்த எனக்கு ஒரு ஆஃபிஸ்.
அப்பவும் கூட பெருங்கோடிஸ்வரன் எல்லாம் என் கிட்ட ஓசியில தான் ஜோசியம் கேட்டானுங்க.
பரிகாரம் சொன்னா தான் ஜோசியருக்கு மரியாதை. பரிகாரம் சொல்லலேன்னா வர்ற ஆளுக்கு சலிப்பு. நான் பரிகாரமெல்லாம் சொல்லவே மாட்டேன்.
ஒருவர் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் ’ட்ரஸ் சென்ஸ்’ பற்றி இவருக்கு ரொம்ப அபிப்ராயம். “ தம்பி மாதிரி ட்ரஸ் பண்ண ஊர்ல ஆளே கிடையாது. ” என்பார்.
(அப்போதெல்லாம் மும்பை கொலாபாவிலிருந்து சராக்தின் ரெடி மேட் ட்ரெஸ் தான் எனக்கு.)

அவர் கொடுத்த ஒரு ஜாதகம் நல்ல இடமாம். ஒரே பெண். பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் இருப்பதாக எழுதிக்கொடுத்தேன்.
குடும்பத்தோடு அந்த பெண்ணின் ஊருக்கு போயிருக்கிறார்.
பெண்ணின் அப்பா அந்த நகரத்தில் பிரபல ஜோதிடர். வீடே ஒரு கோவில் போல இருந்திருக்கிறது. சாம்பிராணி, சூடம், புஷ்பங்கள்…
வாழப்பாடி ராமமூர்த்தி, சரத்குமார் போன்ற பிரபலங்கள் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார்கள்.
என்னுடைய பொருத்த விபரங்களை பார்த்து விட்டு ஜோதிடர் மாப்பிள்ளையின் தகப்பனாரிடம் சொன்னாராம்:”இவர் எழுதியிருப்பது சரி தான். ஆனால் என் பெண் நட்சத்திரத்திற்கும் உங்கள் பையன் நட்சத்திரத்திற்கும் விவாகம் நடத்தக்கூடாது என்று ஒரு விசேஷ ஜோதிடக் குறிப்பு இருக்கிறது”
மிகப்பெரிய ஜோதிடர் அவர். இவர்கள் கிளம்பி வந்து என்னைப் பார்த்தார்கள்.
என் பாட்டில் குற்றம் கண்ட புலவன் எவன்? என்ற கோபமெல்லாம் எனக்கு கிடையாது. நான் இரண்டு பக்கத்திற்கு சில விஷயங்கள் கேட்டு எழுதினேன்.
”புலிப்பாணியில் இவ்வாறு இன்னின்ன நட்சத்திரங்களுக்கு இப்படி இப்படி….. வராஹமிகிரர் பிருஹத் விவாகபடலம் இவ்வாறு சொல்கிறது… ஹோரா ரத்னா நட்சத்திரங்கள் பற்றி குறிப்பது… சாரதீபா கிரந்தங்கள்…ஜாதகாபரண விவாக பலன்… சாராவளி என்று….
இவை எதிலும் உங்கள் பெண் நட்சத்திரத்திற்கும் இந்த பையன் நட்சத்திரத்திற்கும் விக்னங்கள் ஏதுமில்லையே. நீங்கள் எந்த கணிப்பின் படி பொருந்தவில்லை என்று சொல்கிறீர்கள்?”
இதை அவருக்கு தபாலில் அனுப்பி வைக்க சொல்லி பையனின் தகப்பனாரிடம் தந்தேன்.
பிரபல ஜோதிடரிடமிருந்து உடனே, உடனே கிளம்பி வரும்படி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் வந்து விட்டது.
இவர்கள் போனவுடன் முகம் மலர அமர வைத்து சொன்னாராம்
“ இந்த குறிப்பை எழுதிய ராஜநாயஹம் யார்?”
மாப்பிள்ளையின் அப்பா தயக்கத்துடன் : ”இவர் தொழில் முறை அனுபவ ஜோதிடர் அல்ல. என் நண்பரின் மருமகன்…”
பிரபல ஜோதிடர் “ இதை எழுதியவர் குடத்திலிட்ட விளக்கு. மிக அற்புதமான ஜோதிஷ் அறிவு மிக்கவர். இவர் எழுதியதை எல்லாம் இரவு ஏழு மணி துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை செக் செய்தேன். இவர் சொல்வது மிகச்சரி. உங்கள் பையனுக்கு என் பெண்ணை தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். எந்த விக்கினமும் நான் சொல்லப்போவதில்லை.”
இதை ஊருக்கு வந்தவுடன் என்னிடம் வந்து மலைத்து நின்றார்கள். பிரமிப்பாக சொன்னார்கள். ”உங்களைப் பற்றி அவருக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும்”
எனக்கு அப்போதிருந்து ஜோதிடத்தின் மீதிருந்த மதிப்பு மரியாதை போய்விட்டது. இவ்வளவு தானா? என்று ஆகிவிட்டது.
இன்று பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் தூக்கியெறிந்து விட்டேன். ஜோதிடம் என்று எவனும் என்னிடம் எதுவும் கேட்டு வரக்கூடாது என்பதை உறுதியாக சொல்லி விட்டேன்.
ஊர்ப்பய கஷ்டத்த கேட்டு கேட்டு, ஜாதகத்த பாத்து பாத்து எனக்கே ‘போதும்,போதும்’னு சொரிஞ்சி விட்டு எந்திரிக்க வேண்டியதாயிடுச்சி.

பெரும் சிறை, புதைகுழியில் இருந்து மீண்ட திருப்தி.
For this relief,much thanks.
ஒரு விஷயம். அந்த பிரபல ஜோதிடரின் மகளுக்கும், என் மாமனாரின் நண்பர் மகனுக்கும் திருமணம் நடக்கவில்லை.
ஜோதிடர் பச்சை விளக்கு காட்டிய பின் பெண்ணை பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை. பெண் அழகாயில்லையாம்.
………………………………………………….

R.P.ராஜநாயஹம் பற்றி யமுனா ராஜேந்திரன்

$
0
0

ஆர்.பி.ராஜநாயஹம் எழுத்துக்கள் தொகுப்பாக வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன். நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் ஈரமும் பரவசமும் போன்றது அவரது எழுத்துக்கள். கொஞ்சமாய் வார்த்தைகள். நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் அழகையும் ஆச்சர்யத்தையும் அதீதமான அடக்கத்தையும் விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டிருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். ராஜராஜன் பதிப்பகம் அவரது இரு நூற்களையும் வெளியிட்டிருக்கிறது. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.


பதின்மம்

$
0
0

That awkward moment when your puppy love asks you who your crush is.
Desire, Jealousy, Passion and Anxiety!
Teen age love is not real
but teen age affairs are the most beautiful part of everybody's life and the failure teaches the great lessons in life.

There is 'hell' in hello,
'good' in goodbye,
'lie' in believe,
'over' in lover,
'end' in friend,
'ex' in next
and
'if' in life.

When I just entered teens,
I asked my sweet heart
What will I be?
Will I be a rainbow day after day?
This what she said to me
Che sara,sara
Whatever will be will be
Future is not ours to see
Che sara, sara.
......................................

சுபகுண ராஜன்

$
0
0

பெயரே மங்களகரமாக சுபகுண ராஜன்.
விகடன் விருது விழாவிற்கு போயிருந்த போது சுபகுணாவை பதின்மூன்று வருடங்களுக்குப் பின் சந்தித்தேன்.
நான் சென்னை வந்து ரெண்டரை வருடம் ஆகிவிட்டது. இப்போது தான் சந்திக்க வாய்த்தது.
’காட்சிப்பிழை’யில் என்னுடைய கட்டுரை முதன் முதலாக பிரசுரமான போது ராஜன்குறை கேட்டாராம் “ ராஜநாயஹத்தை எப்பிடி புடிச்சீங்க?”
சுபகுணராஜன் பதில்: ”உங்களுக்கெல்லாம் ராஜநாயஹத்தை தெரியும். எனக்கு கேபின்னு ஒரு முரடனத்தான் தெரியும்.”
என்னிடமே கேட்டிருக்கிறார் : ”உண்மைய சொல்லுங்க. கேபிய என்ன பண்ணீங்க.. கொலை பண்ணிட்டீங்களா..”


அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் சுபகுண ராஜனும் நானும். இன்று இலக்கிய உலகில் உள்ளவர்கள் அறியுமுன்னரே என்னை அறிந்தவர் சுபகுண ராஜன்.
அமெரிக்கன் கல்லூரியின் வாஸ்பர்ன் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
நான் டே ஸ்காலர்.

சினிமாவில் சுபகுணராஜன் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஜெகனாதனிடமும், நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக பி.ஆர் சோமுவிடமும் பணி புரிந்திருக்கிறோம். அப்போது கதீட்ரல் ரோட்டில் American college Alumni functionல்
நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதுண்டு.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
கஸ்டம்ஸில் என் அப்பா, என் சகோதரன் இருவருடனும் சுபகுணா பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் ஒரு நாடகக் கருத்தரங்கில் 1990ல் மீண்டும் சந்தித்தோம்.
முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடியின் சம்பந்தி. இவருடைய மகளை அவருடைய மூத்தமகன் திருமணம் செய்திருக்கிறார்.
சுபகுணாவின் திருமதி மதுரையில் பிரபலமான டாக்டர்.
தூத்துக்குடிக்கு நான் என் ஆஃபிஸ் வேலையாக போய் இருந்த போது அங்கே கஸ்டம்ஸ் சூப்ரிண்ட் ஆக இருந்த சுபகுணா என்னை சந்திக்க ஆசைப்பட்டு தகவல் சொன்ன போது அவரை போய் பார்த்தேன். அப்போது அளவலாவிக்கொண்டிருந்த போது ஒரு ஃபோன் கால். ‘கஸ்தூரி மான்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு. ஜெயமோகன் லைனில்.
என்னிடம் பேசுவது யார் என்பதை சொன்ன சுபகுணா “ ஓ.. உங்களுக்கும் ஜெயமோகனுக்கும் ஆகாதுல்ல…”
கஸ்தூரி மானில் மாட்டுக்கன்னையனாக நடித்தார்.
இலக்கிய உலகில் ‘காட்சிப்பிழை’ பத்திரிக்கையாசிரியராக, பதிப்பாளராக, எழுத்தாளராக.
 டிவி கலந்துரையாடல் நிகழ்வுகளில் கூட தென்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன்  ’ஆசை முகங்கள்’ என்ற தலைப்பில் அவருடைய கயல் கவின் புக்ஸ் பதிப்பாக பழைய திரை நடிகைகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். அதில் நான் எழுதிய ’விஜயகுமாரி’ பதிவை சேர்த்தார். அப்போது அவர் என்னிடம் மொபைலில் பேசிய போது சொன்னார்
 “ உங்கள கேக்காம நான் ஒரு வேலை செஞ்சிருக்கேன்..சுய நலம் தான்.என்னன்னா, உங்க விஜயகுமாரி பதிவை ஆசைமுகங்கள் நூலில் சேத்திருக்கேன்.”

மதுரையில் சுபகுண ராஜனுக்கு சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட மோதல்.
‘என்னடா Anti-culture?’
ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் எனக்கு ஜெயமோகனோடு நிகழ்ந்த மோதல்.

தமிழ் இலக்கிய உலகம் என்றும் மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்.

ஜெயமோகனுக்கு சுபகுண ராஜன் நண்பர்.
சாரு நிவேதிதாவுக்கு ராஜநாயஹம் நண்பர்.

We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’!

…………………………….

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html



கூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது

$
0
0

06-02-2018 அன்று கூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ இது. 

ரெண்டு மதுரை சல்லிகள் இடையே நடந்த சவடால் சண்டை பற்றி நடித்துக் காண்பித்தே விளக்குகிறேன். வீடியோ எடுக்கப்பட்ட விஷயம் எனக்கு தெரியாது.
...........................................................................
கண்ணுசாமி மேடை பேச்சு
வருடம் 1975 ஆகஸ்ட் மாதம்.
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில்(1973) எம்ஜியார் கட்சி மகத்தான வெற்றி பெற்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட பின்னால்!
மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர். மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது. நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார். பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான். ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான்.
எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார்.
"நீ என்னா சண்டை போடுறே. நம்பியாரும் அசோகனும் சொத்தைப்பயலுக.
நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா. ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க.எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ.
டே நிக்சன் !நிக்சன் ! ஒன்னை நான் பாராட்டுறேன். நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே. ஒன்னை நான் பாராட்டுரண்டா.
ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான்.மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே. கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன்.
டே எதிர்க்கட்சி காவாளிகளா... ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகண்ணு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி.
டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார்.தங்காத்த்து திருப்பி கேட்கிறார். அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும்! டே... எனக்கெல்லாம் எந்திரிச்சிடுச்சின்னு வச்சிக்க, அப்புறம் மடக்கறதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....
யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா ..
டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன்.. என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும். பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ...."
.......................................
http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-34.html
http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-11.html
http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-15.html

ஊசிக்கு ஊசி

$
0
0

கண்ணுச்சாமி சண்டியர் மற்றும் அரசியல்வாதி.
தங்காத்து கூத்துல வேஷம் போடுறவர்.
‘கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர்வெள்ள.’
தங்கப்பல் முன் வரிசையில் ஒரு நாலு. அதனால் தங்கப்பல்லு தங்காத்து. சண்டியர் தான்.
சொலவடை ஒன்று சல்லிகள் தங்களுக்குள் யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் “ மாப்ள…உனக்கென்னடா… தங்கப்பல்லு தங்காத்து..”
கண்ணுச்சாமி சைக்கிளில் வரும்போது தங்கப்பல் தங்காத்து கறிக்கடையை பார்க்கிறார். கறிக்கடையில் தங்காத்து இல்லை.
சைக்கிள விட்டு எறங்கி “ டேய் தங்காத்து.. நீயெல்லாம் எனக்கு ஆளாடா? நானெல்லாம் ஆளையும் ஓத்து நிழலையும் ஓத்துட்டுப்போறவன்டா டேய்..” இப்படி சவுண்டு விடும்போதே கறிக்கடையின் முன் அரிவாளால் ஒரு வட்டம் போடுகிறார்.
“ எங்கடா அவன்” கறிக்கடையில் உள்ள சுள்ளானை மிரட்டுகிறார்.
சைக்கிளில் ஏறி சவுண்டு விட்டு கொண்டே போகிறார்.
தங்காத்து சைக்கிளில் சாவகாசமாக வருகிறார். கடையின் முன்னால் ஒரு வட்டம் வரையப்பட்டிருப்பதை பார்க்கிறார். பையன் வட்டம் போட்டது கண்ணுச்சாமி என்பதை வெளிப்படுத்துகிறான். ”டேய், போய் அவன் வீட்டில இருக்கானான்னு பாத்துட்டு வாடா”
சுள்ளான் நடந்து போய் பார்த்துவிட்டு வந்து கண்ணுச்சாமி வீட்டில் இல்லையென்பதை சொல்கிறான்.
தங்காத்து “ எடுறா அந்த அரிவாள,” என்று வாங்கிக்கொண்டு கண்ணுச்சாமி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.
”டே கண்ணுச்சாமி, ஒனக்கு அழிவு காலம்டா… எங்கிட்ட மோதுறவன் காணாம போயிடுவான்டா..ங்கொம்மாலோக்க..” இப்படி சொல்லும்போதே கறிக்கடையில் கண்ணுச்சாமி போட்ட வட்டத்தை விட பெரிய வட்டமாக கவனமாக அரிவாளால் போடுகிறார்.
சவுண்டு விட்டுக்கொண்டே போய் விடுகிறார்.
கண்ணுசாமி வீட்டுக்கு வருகிறார். வீட்டின் முன் இருக்கிற வட்டத்தை பார்க்கிறார். அவர் பெஞ்சாதி விவரம் சொல்கிறார். பக்கத்தில் உள்ள சுள்ளான் ஒருவனை கறிக்கடையில் தங்காத்து இருக்காப்பிலியான்னு பார்த்து வர ஏவுகிறார்.
அங்கே கறிக்கடையில் தங்காத்து இல்லைன்னு தெரிந்தவுடன் அரிவாளோடு கிளம்பி விடுகிறார். கறிக்கடையின் முன் வீட்டின் முன் இருந்த வட்டத்தை விட பெரிய வட்டம் வரைகிறார். வரையும் போதே “ டே தங்காத்து….ங்கோத்தாட்ட குடிச்ச செனப்பால நான் கக்க வச்சுறவன்டா.. எனக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சுக்க.. அப்பறம் மடக்க ஆளே இல்லடா…” என்ற வீரவசனம் உச்சரிக்கிறார்.
கடையில் உள்ள சுள்ளானப்பார்த்து கர்ஜனை- “டேய் இப்ப உன்ன வகுந்து கறிக்கடையில தொங்க விட்டுட்டு போறேன்டா…”
சுள்ளான் மிரண்டு “அண்ணே..வேண்டாண்ணே..” என்று சொல்லிக்கொண்டே கடையை விட்டு டெம்ப்ரவரியாக எஸ்கேப்.
தங்காத்து கடைக்கு வந்து கடையின் முன் இருந்த பெரிய வட்டத்தை பார்க்கிறார்.
சுள்ளான் “பயமாருக்குண்ணே..”
’அவன் வீட்டில இருக்கானா பாத்துட்டு வாடா’
இல்லையென்பது தெரிந்ததும் தங்காத்து அரிவாளுடன் போய் கண்ணுச்சாமி தெருவை அடைத்து ஒரு மிகப்பெரிய வட்டம்…..
எவ்வளவு நாள் இப்படி கண்ணாமூச்சி ஆடமுடியும்?
ஜெயில் ரோட்டில் எதிரும்புதிருமாக நேருக்கு நேர் சைக்கிள்ள மோதி கீழே விழுந்து..
வேறு வழியே இல்லாம கைகலக்க வேண்டிய நிர்ப்பந்தம்..
கண்ணுச்சாமி….லொள்
தங்கப்பல்லு தங்காத்து லொள் லொள்..
கண்ணுச்சாமி வள்
தங்காத்து வள் வள்
வாய்த்தீட்னி நீண்டும்படி இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அதற்குள் யாராவது விலக்கி விட வர வேண்டும்.
சொரிக்காம்பட்டி பால்ராசு கஞ்சா சரக்கு ரொம்ப நல்லாயிருக்கும். போலீஸ் அடித்த அடியில் வாயில் முன் வரிசைப்பற்கள் மேலும் கீழும் ஐந்து இருக்காது.
அந்த சொரிக்கான் பட்டியான் ஓடி வந்து “ டே ஏண்டா எனத்தானுங்களுக்குள்ள மோதிக்கிறீங்க.. ஆங்.. டே நம்ம நாலு பேருக்கு பஞ்சாயத்து வக்கணுன்டா.. நம்ம நாலு பயல அப்பணும்டா ஏலேய்… அம்ம பயலுகளுக்குள்ள மோதுனா நல்லாவாடா இருக்கு… ம்.. மாமு.. கண்ணுசாமி போய்யா.. டே பங்காளி.. தங்காத்து நீ சைக்கிள எடுத்துக்கிட்டு கெளம்புடா.. எனத்துக்குள்ள எதுக்குடா சலம்பல்..”
ரெண்டு பேரையும் ஜெயமணியும் கூட பிரிச்சி விட்டு அனுப்புகிறான்.
இதில் உள்ள நுண்ணரசியல்.
மதுரையில இவங்க ஒரே எனத்துக்குள்ள பெரிசா அடிதடி, அரிவா வெட்டுல்லாம் அபூர்வம். மத்த ஜாதிக்காரனா இருந்தா சவுண்டு விடும்போதே அவனுக்கு அடி விழுந்துடும். அரிவா வெட்டு விழும். அதுவும் கூட்டமா வந்து தான் இந்த செய்கையெல்லாம்.
ஊசிக்கு ஊசி பாயுமா?
அதனால கண்ணாமூச்சி.



குறும் படமொன்றில்

$
0
0

சில மாதங்களுக்கு முன் அடையாறு ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் செய்த ப்ராஜெக்ட் ஷார்ட் ஃபில்ம் ஒன்றில் நான் நடித்தேன்.
அபீஸ்குமார் இயக்கிய ’இடம் சேர்’ குறும்படம்.
நான் நடித்த காட்சிகளின் Clippings. 
குரல் என்னுடையதல்ல. டப்பிங். கூத்துப்பட்டறை வேலை காரணமாக டப்பிங்கிற்கு என்னால் போக முடியவில்லை.

புத்திரசோகத்திற்காளான கதா பாத்திரமாக நடித்தேன்.

https://www.facebook.com/rprajanayahem/videos/2131653567048098/

......
புத்திர சோகம் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.
ஜே.எம் கூட்ஸியின் மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க் நாவல் தாஸ்தயேவ்ஸ்கியை நாயகனாகக் கொண்டது.
“Stiff shoulders humped over the writing-table, and the ache of a heart slow to move. A tortoise heart.”
இறந்து விட்ட தன் மகன்(step son) வாழ்ந்த அதே இடம், அதே அறையில் தாஸ்தயேவ்ஸ்கி வந்து தங்குகிறார்.
Hanging over the novel is a scene from Coetzee's own life: the death of his son at 23 in a mysterious falling accident.
கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
மார்ட்டின் ஷீன் நடித்த “The way”. யாத்திரைக்கு சென்ற மகன் புயலில் சிக்கி கொல்லப்படுகிறான். அப்பா மார்ட்டின் ஷீன் மகன் முடிக்காமல் விட நேர்ந்த அந்த யாத்திரையை அதே பாதையில் இவர் தொடங்குகிறார்.
Tom: [Having been handed the box with his son's ashes] I'm going to walk the Camino de Santiago.
Captain Henri: But you haven't trained for this walk, and no disrespect, you are more than 60 years old.
Tom: [shrugs] So it'll take me a bit longer than most.
Captain Henri: You'll be lucky if you finish in two months.
Tom: Well, then I'd better get started. We're leaving in the morning.
Captain Henri: [Looking a bit confused] "We"?
Tom: [Holding up the box with his son's ashes] Both of us.
மகனுடைய சாம்பலுடன் trekking போகிற தகப்பன்.
Tom: I'm sorry about your baby.
Sarah: I'm sorry about yours.
Tom: Mine was almost 40.
Sarah: Yeah, but he'll always be your baby.
......
புத்திரனைப் பறி கொடுக்கும் தகப்பனாக ” The Way” படத்திலும்
‘The Master of Petersberg’ நாவலிலும் நாயகர்கள் அந்தத் துயரத்தை இப்படி எதிர் கொண்டு தவிக்கிறார்கள்.
............................
புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.
ராவணனின் புத்திர சோகம்:
”எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
- கம்பன்
.............





நீரவ் மோடியும் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும்

$
0
0

திருப்பதி திருச்சானூர் உரையாடல்
வெங்கடேஷ் : நம்ம அருள் கிடைச்சவங்களை பூலோகத்தில வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, போலீஸ் படுத்துற பாட்டை நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு. என் வேலய கொறை சொல்ற மாதிரியில்ல இருக்கு. என்ன நான் சொல்றது?
பத்மா : நீங்க ’காக்கும் தொழில்’ செய்ய வேண்டியிருக்கிறதால நல்ல வேளை மல்லயாவ லண்டனுக்கும் நீரவ் மோடிய நியூயார்க்குக்கும் அனுப்பிட்டீங்க.
வெங்கடேஷ் : சிஸ்டம் சரியில்ல.
நானும் பேங்க்கு மூலமா தான அருள் பாலிக்க வேண்டியிருக்கு. அத இப்படி கரிச்சி கொட்டுறாங்கே..
பத்மாவதி : லட்சுமி கடாட்சம் என்பத கிரிமினல் வேலங்கறானுங்க. கிலோ கணக்குல தங்கம், வைரம், லட்சக்கணக்கில பணம்னு உண்டியல்ல போடறவங்க நம்ப அருள் கிடைச்சவங்க தான..பதிலுக்கு அவங்களுக்கு நாமளும் நாலு செய்யணும்னு நெனக்கிறதே தப்பா அர்த்தமாயிடுச்சே...
........................

பெற்றோர் திருப்பதிக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போய் மொட்டை போட்டு சாமி வெங்கடேசப்பெருமாள் தரிசனத்திற்காக கூண்டில் அடைபட்டு, அடைபட்டு சாமி கும்பிட்டு விட்டு உண்டியலில் ஒரு முழு ஐம்பது ரூபாய் போட்டார்கள். முன்னதாக அந்த ரூபாய் நோட்டில் “அனுஸ்ரீக்கு சளி, மூக்கடைப்பு நல்லா போகனும். வெங்கடேசாய நம” என்று சீனிவாசப்பெருமாளுக்கு விவரம் எழுதி போடுகிறார்கள்.

வெங்கடேசப்பெருமாள் அனுஸ்ரீயின் ஏட்டை எடுக்கிறார். சளி, மூக்கடைப்பு நிவர்த்தி விஷயமாக மஹாலட்சுமியிடம் என்ன செய்யலாம் என கேட்கிறார்.
பத்மாவதி தாயாரின் reply: 'ஐம்பது ரூபாய் தானே.. இப்போதைக்கு சளியை மட்டும் நிவர்த்தி செய்வோம். ஒரு நூறு ரூபாயில் அல்லது இருநூறு ரூபாய் நோட்டில் விபரம் எழுதியிருந்தாலாவது மூக்கடைப்பையும் சரி செய்திருக்கலாம். தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி வருகிறார்கள். ஆகிற செலவோடு உண்டியலிலும் நல்ல தொகை போடுவதற்கென்ன? இதில எதுக்கு கஞ்சத்தனம்.'
The temple bell stops?
திருப்பதி உண்டியலில் போட்ட ஐம்பது ரூபாய் எங்கெங்கோ சுற்றி, ஆந்திராவை விட்டு கிளம்பி, தமிழ் நாட்டின் தலை நகரத்திற்கு வந்திருக்கிறது.
உலகம் ரொம்ப சின்னது தானே?
ஆற்காட் ரோட்டில் நான் நூற்றைம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு இருநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது எனக்கு மீதியாக வந்த நோட்டு அதே ஐம்பது ரூபாய்.
இன்று மெட்ப்ளஸ் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதற்கு அந்த நோட்டைத் தான் கொடுத்தேன்.

...............

அடுத்த கதாநாயகன் பராக் பராக்
நீரவ் மோடி!

இந்தியாவில 85வது பணக்காரன்.
உலகத்தில 1234வது துட்டுக்காரன்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் - 11000 கோடி
மல்லையா லண்டன்லயா?
நீரவ் மோடி நியூயார்க்ல!
நீரவ் மோடி மாமா கையில குடுமி. மாமாவையாவது பிடிக்க முடியுமா?
சக்சி- சிங்வி- கீதாஞ்சலி ஜெம்ஸ் - வைரங்கள்
பஞ்சாப் நேஷனல் பேங்க்ல யாரோ ஒரு டெபுடி மானேஜரை கைது செய்து பெருஞ்சாதனை செய்து விட்டார்கள்.
மீடியாக்களுக்கு நல்ல வேட்டை.
டேய்! Breaking news குடுத்துக்கிட்டே இருங்கடா..இப்படி ஒரு Addiction வந்துடுச்சே... கை விரல்லாம் நடுங்குதே...

....................

Chesara - Doris Day Song - R.P. Rajanayahem

கிரக பீடைகள்

$
0
0

திருதராஷ்ட்ரன் குருஷேத்ர யுத்தம் முடிந்த பின் தன் தம்பியும் ஞானியுமாகிய விதுரனிடம் புலம்புகிறான்: “ இது என்னடா விபரீதம். மகாராஜா நான். கபோதியாய் பிறந்தேன். காந்தாரி மூலம் எனக்கு பிறந்த நூறு பிள்ளைகள். ஒரு பெண். யுயுத்சு எனக்கு வப்பாட்டி மகன் தான. அவன் பாண்டவர்களோட சேந்துட்டான். 18 நாள் யுத்தத்துல நூறு மகன்களையும் பறி கொடுத்துட்டேன். ஜயத்ரதன் செத்துட்டதால என் ஒரே மகள் துச்சலை விதவையாயிட்டா.
புத்ர சோகம் எவ்வளவு கொடுமை. ஒரு பிள்ளைய பறி கொடுத்தாலே தாங்க முடியாதேடா. கபோதியா பொறந்து நான் பெத்த பிள்ளைகள கண்ணால பாக்க கூட கொடுத்து வக்கலயேடா”
நீதிமான் விதுரன் பதில் : அண்ணே, மனுசன் அவன் அம்மா வயித்தில கருவா ஜனிச்சி, பத்து மாசத்தில யோனித்துவாரம் வழியா வெளிய வந்து விழுந்த அந்த வினாடி முதல் நாய்கள் மாமிசத்த துரத்துவது போல கிரக பீடைகள் அவனை துரத்த ஆரம்பித்து விடுகின்றன.”
’கிரக பீடைகள்’ என்கிறான் விதுரன்.
இத புரிஞ்சிக்கிட்டா ஜாதகமே பாக்க மாட்டோம்.
கோச்சாரத்தில் முக்கிய கிரகங்கள் சனியும் குருவும்.
பன்னிரண்டு ராசியையும் சுற்றி வர சனி முப்பது வருடம் எடுக்கிறான். குரு பன்னிரண்டு வருடங்கள்.
குரு ஒரு ராசியிலிருந்து இரண்டாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடம், ஒன்பதாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் நன்மை செய்கிறான்.
ஜென்மராசியிலோ, மூன்றாமிடத்திலோ, நான்காமிடத்திலோ,
ஆறாமிடத்திலோ, எட்டாமிடத்திலோ, பத்தாமிடத்திலோ, பன்னிரண்டாம் இடத்திலோ மனுசனை படாத பாடு படுத்தி எடுத்துடுறான்.
மற்றபடி ஜென்மத்தில் ராமர் சீதையை வனத்தில் சிறை வைத்ததும் அதாவது ஜென்மராசியில் குரு இருக்கும்போது இதற்கீடான துயர்.
மூன்றாமிடத்தில் குரு இருந்த போது தான் துரியோதனன் படையோடு மாண்டான். எவ்வளவு சப்போர்ட் இருந்தது அவனுக்கு. பீஷ்மர், கர்ணன், துரோணர், அஷ்வத்தாமா என எப்பேர்ப்பட்ட டைனாமிக் பெர்சன்ஸ். அவர்கள் எல்லாம் துணையிருந்த போதும் துரியோதனனின் ராசிக்கு மூன்றில் குரு நின்ற போது தான் அவனுக்கு சர்வ நாசம் நிகழ்ந்தது.
தர்மபுத்திரர் நாலில் வனவாசம் போனதும். குரு நான்கில் நிற்கும்போது சக்ரவர்த்தி தர்மனே வனவாசம் ஏகிய சூழல்.
சத்திய மாமுனி கைகால்களில் தளை பூண்டது ஆறில் குரு நிற்கும்போது.
நல்லவன போலீஸ் அரஸ்ட் செய்வது குரு ஆறில் நிற்கும்போது தான்.
சண்டை செய்யும்போது வாலிக்கு எதிராளி பலம் பாதி கிடைத்து விடும். எப்பேர்ப்பட்ட வலிமை இது. அப்படிப்பட்ட வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது வாலி ராசிக்கு எட்டில் குரு நின்ற போது தான். ’இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்ததும்.’
பத்தில் குரு ‘ குரு பத்தில்- ஈசனார் திருவோட்டில் இரந்து உண்டதும்’
பத்தில குரு ஸ்தான சலனம். கௌரவ பங்கம்.
பரமேஸ்வரனே ‘பிச்சாண்டி பாத்திரத்தில் பிச்சையிடுங்கள்’ என்று பிச்சையெடுத்து சாப்பிட்டாராம்.
பன்னிரண்டில் குரு இருக்கும்போது தான் ராவணன் முடி துறந்த நிலை. ஈஸ்வர பட்டம் பெற்ற ராவணனே ராமனிடம் தோற்று “மண் மகள் முகம் கண்டேன், மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய்” என்று புலம்பியழுது உயிர் விட்ட போது ராவணன் ராசிக்கு பன்னிரண்டில் குரு நின்றிருந்தான்.
சனி ஒரு ராசியில் ரெண்டரை வருடம் நிற்பான். மூன்றாமிடம், ஆறாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் ஒரு மனுசனுக்கு நிம்மதியை கொடுப்பான். அதாவது முப்பது வருடத்தில் ஏழரை வருடம் மட்டும் சுகம்.
ராசிக்கு பன்னிரண்டாமிடம், ஒன்று, இரண்டாமிடம் வரும்போது ஏழரைச் சனி.
நான்காமிடம் வரும் போது மரணச்சனி. உயிரை எடுப்பதிலேயே குறியாயிருப்பான். தாயார்க்கு ஆகாது. வீடு, நில புலன்களை வில்லங்கப்படுத்துவான்.
ராசிக்கு ஐந்தாமிடம் சனி வரும்போத பூர்வ புண்ணிய யோகத்தையெல்லாம் Freeze பண்ணிடுவான். முன்னோர் செய்த புண்ணியங்கள் கூட பலிக்காது. அந்த ரெண்டரை வருடம் புத்திரர்களுக்கும் தீமை செய்யும்.
ஏழாமிடம் வரும்போது குடும்பத்தில் சிக்கல், பிரச்னை. தாரம் உடல் ஆரோக்கியம் சரியா இருக்காது. மனைவி வகையில் பல மாதிரியான கவலைகள். வீட்டில் நிம்மதி சுத்தமாய் இராது.
எட்டாமிடம் சனி. அஷ்டமத்து சனி. அஷ்டமத்து சனி பிட்டத்து துணிய புடுங்கிடும். கோமணத்தையே உருவி விட்டுறும்னா எப்படி கொடுமை? ஏழரை சனியில ஏழரை வருஷத்தில அனுபவிக்கிற கொடுமைய இந்த ரெண்டரை வருஷத்தில அனுபவிக்கணும். முழுக்க பொருள் விரையங்கள அவசர அவசரமா சனி செய்வானாம். சொத்து, நகை, பணமெல்லாம் கொள்ளையடிப்பான் சனின்னு ஐதீகம்.
ஒன்பதில சனி தகப்பனுக்கு கண்டம். பாக்யங்கள பூரா முடக்கிடுவான்.
பத்தில சனி வரும் போது தொழில்ல பல சரிவு, சிக்கல், வேலை போயிடும்.
சனி மூணு, ஆறு. பதினொன்னு இருக்கும்போது எப்படியும் குரு ஒரு வருடம் ஜென்மத்தில, மூணுல, நாலில, ஆறில, எட்டில, பத்தில, பன்னிரண்டுல நின்னு அதிலும் கெடுப்பான்.
முப்பது வருட வாழ்க்கையில ஒரு மூன்று வருடம் நிம்மதின்னு சொல்லலாம்.
அப்படியும் சொல்ல முடியுமா. ராகு கேது பெயர்ச்சி மூணு, ஆறு, பதினொன்னு தவிர மத்த இடங்கள்ள நின்னா சிலுவையில அறஞ்சிடுவானுங்க.
சரி கோச்சாரம் சரியா இருந்தா தசா புக்தி கெடுக்கும். ஆறாம் வீட்டுக்காரன் தசை, எட்டாம் வீட்டுக்காரன் தசை, மாரகாதிபதி தசை, பன்னிரண்டாம் வீட்டுக்காரன் தசை இப்படி வந்திச்சின்னா லைஃபே ஸ்பாயில் ஆயிடும்.
ஜோசியன் கோச்சாரம் சரியாயிருந்தா தசாபுக்தி சரியாயில்லம்பான். தசாபுக்தி சரியாயிருந்தா கோச்சாரம் கெடுக்குத்துன்னுடுவான்.
பரிகாரம் சொல்லி காசை புடுங்க ஜோஷியம் எவ்வளவு வசதியாருக்கு!
ஒருவன் நல்லாயிருப்பதாக தெரிந்தால் ஜோதிடம் பிரமாதமா சொல்வார்கள். கஷ்டப்படுகிறான் என்றால் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஏன் பலிக்கவில்லை என்பதற்கு பல சால்ஜாப்பு சொல்ல முடியும்.
’கிரக அடைவுகள், அவயோக ஜாதகம், ராகு கேதுகளுக்கிடையில் எல்லா கிரகமும் சிக்கி யோக பலன்களை கெடுத்து விட்டதே… ஒன்பதாம் வீட்டுக்காரன் நீசமாகி அவனுக்கு நீசபங்கம் ஏற்படல, லக்னாதிபதி கெட்டுப்போயிட்டான், பத்தில பாவியாவது நிக்கணும், ஒரு கிரகம் கூட இல்ல,
பிறந்த நேரத்தில் குரு என்ற பிரஹஸ்பதிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் சந்திரன் சகட யோகம். வாழ்க்கையே சக்கரம் போல…. ஒன்பதாம் வீட்டுக்காரன் எட்டில போய் பத்தாம் வீட்டுக்காரன் பதினொன்னுல போய் நின்னுட்டான். இப்பேர்ப்பட்ட கிரக அடைவுக்கு எந்த யோகமுமே பலிக்காது…’ இப்படி உச்சு கொட்டி, உச்சு கொட்டி ஜோதிடன் பரிதாபப்படுவான்.
தலை சுத்த வைக்கும் ஜோதிடம்.
இதை தான் விதுரன் “ பிரசவத்தில யோனித்துவாரத்தில் இருந்து வெளிய வந்து இந்த பூமியில் விழுந்த அந்த வினாடி முதல் கிரக பீடைகள்
‘நாய்கள் மாமிசத்தை துரத்துவது போல’ மனிதனை துரத்த ஆரம்பிக்கின்றன’ என்கிறான். எது வரை? Until his death.
கிரேக்க தத்துவஞானி சோலன். மனிதன் எப்போது சந்தோசமாயிருக்கிறான்? என்ற கேள்விக்கு சமாதியில் தான் என்று சொன்னான். பரமபதம் அடைந்து விட்டார் என்று சொல்வது போல ஒருவர் மரணத்தின் போது இந்த Vocabulary. “ He has attained Solan’s Happiness”
ஜோதிடம் பார்க்காமல் இருப்பவன் தான் உண்மையிலேயே யோக ஜாதகக்காரன்.
ஸ்ரீ ஜாதகபலன்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒருவன் ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்ரஸ்தானம். பெண்புத்திரம் பிறப்பதே புத்திர தோஷம் என்று தான் கிரந்தங்கள் சொல்கின்றன.
பெண் ஜாதகத்தில் எந்த இடத்தில் கிரகம் நின்றாலும் பலன் திடுக்கிடும்படியாக இருக்கும். ஏழு எட்டாமிடம் சுத்தமாக கிரகமில்லாமல் இருக்க வேண்டும். கிரகமிருந்தால் பெண் ஜாதகம் அவயோக ஜாதகம். கிரகங்கள் கூடியிருப்பது, கிரகங்கள் நீசமாயிருப்பது, கிரகங்கள் பார்வை எல்லாமே பெரும்பாலும் பெண்ணுக்கு துர்பலன்கள் தான்.
பெண்ணின் ஜாதகத்தை ஜோதிடனிடம் காட்டாமலிருப்பதே நல்லது.
நான் 1989ல் புதுவை பல்கலை கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் பேசிய போது நளபாகம் நாவல் பற்றி பேசும்போது பெண் ஜாதகம் பற்றி, ஆண் களத்திர ஸ்தானம் பற்றிய வக்கிர குறிப்புகள் பற்றி ஜாதக பலன்கள் கூறுவது பற்றி கோடிட்டு காட்டினேன்.

’ஜோதிடம் தனை இகழ்’ 
- புதிய ஆத்திச்சூடியில் பாரதி
…………………..

http://rprajanayahem.blogspot.in/2018/01/blog-post_31.html

Gango and A Hen Thief ----- R.P.Rajanayahem


ஸ்ரீதேவி

$
0
0

ஒரு ஜோதிடர். சுப்ரமண்ய தேசிகர் என்று பெயர். இவர் பற்றி என் “ராஜாஜியின் ஸ்வர்ண ஆகர்ஷண மந்திரம்” பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் தன்னை சங்கீத ஞானி எம்.எம்.தண்டபாணி தேசிகரின் கஸின் என்று சொல்லிக்கொண்டார். சுப்ரமண்ய தேசிகருக்கு அப்போது 80 வயது. நான்கு மனைவிகள் இவருக்கு என்று என்னிடம் சொன்னார்.
ஸ்ரீதேவி அப்போது அகில இந்திய நடிகை.
ஸ்ரீதேவி பிறந்த போது சுப்ரமண்ய தேசிகரிடம் வக்கீல் ஐயப்பன் வந்து ஜோதிடம் கேட்டாராம்.
( விருதுநகரில் 1967ல் காமராஜரை மட்டுமல்ல சிவகாசியில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் பெ.சீனிவாசன்!)
சுப்ரமண்ய தேசிகர் ஜாதகம் கணித்து சொன்னாராம்.
“இந்த குழந்தை இருபத்தைந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்கும்”
ஸ்ரீதேவி அப்பா சொன்னாராம் “நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை. ஒரு பெண்பிள்ளை எப்படி இருபத்து ஐந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்க முடியும்?”
இதை என்னிடம் சொன்ன போது இது உண்மையாகியிருந்த நிலை.
ஜோதிடர்கள் எப்போதும் இப்படி பல விஷயங்களை தங்கள் prediction படி நடந்ததாக குறிப்பிடுவது அவர்கள் தொழில் வளர்ச்சிக்காக.

………………………..

மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை அன்று ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.

’இன்றைய இளம் கன்றுகள் எங்கள் ஸ்ரீதேவி இழப்பு பற்றி புரிந்து கொள்ள சிரமப்படலாம். ஆனால் இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களில் நயன்தாரா இறக்கும்போது நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்’ என்று ஒரு பெரியவர் நா தளுதளுக்க ( தழு தழுக்க?) சொன்னார்.
ஸ்ரீதேவிக்கு இப்ப இறக்கும்போது வயது 54!! தந்தி டிவி, நியூஸ் 7 சேனல் சொன்ன விஷயம்.
1976ல மூன்று முடிச்சு படம் வந்தப்ப 12 வயசா? சரி 13 வயசுன்னு வச்சிக்கிட்டாலும் பாலச்சந்தர் ஒரு சிறுமியைத் தான் கதாநாயகியாக நடிக்க வச்சாரா? 1977ல பாரதிராஜா 14 வயசு சிறுமியை மயிலாக காட்டினாரா? என்ன விவரமில்லாத உலகம் இது. When she was cold in blood and green in judgement.
நாளைக்கு நியூஸ்பேப்பர்களிலாவது வயது 54 என்பதை 55 (!) என்றாவது குறிப்பிட்டு நெஞ்சில் பால் வார்த்தால் நல்லது.

தமிழ் திரை குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும், ஸ்ரீதேவியும் பின்னால் அகில இந்திய அளவில் சாதித்த நட்சத்திரங்களானார்கள்.
ஸ்ரீதேவியை ’நான் தான் ’துணைவன்’ படத்தில் குழந்தையாக அறிமுகப்படுத்தினேன்’ என்று சாண்டோ சின்னப்பா தேவர் சொல்வதுண்டு.
தமிழ் படங்கள் என்று மட்டும் இல்லை. மொத்தமாகவே சொன்னாலும் இருவரைப்பற்றியுமே சொல்ல வேண்டுமானால்
ஸ்ரீதேவி - கமல்ஹாசன் ஜோடி தான் பொருத்தமானது.
வி.ஜி.பி கோல்டன் பீச்சில் என்.டி.ராமாராவ் மெரூன் கலர் கோட், ஒயிட் வெஸ்ட் கோட், பச்சை கூலிங்க்ளாஸ், ஒயிட் ஷூ போட்டுக்கொண்டு ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும் ஷூட்டிங் ஒன்று நான் பார்த்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராகாதிருந்தால் ஸ்ரீதேவி நிச்சயமாக எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருந்திருப்பார்.
தமிழில், தெலுங்கில் கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத விஷயமல்ல. சுலபமாக பாலிவுட் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது.
பாலிவுட் உலகம் எப்போதும் பெண் நடிகைகளை போஷிக்கும். இங்கிருந்து போன வஹிதா ரஹ்மான், வைஜயந்திமாலா, ஹேமா மாலினி, ரேகாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் நல்ல அந்தஸ்து வழங்க தயங்கவில்லை.
எங்கள் காலத்தில் அமலாவையும் பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு செத்திருக்கிறாரா இல்லையா என்று கூட விசாரணை செய்ததுண்டு.
தமிழில் இருந்த அழகான குடமிளகா மூக்கு ஸ்ரீதேவி இந்தியில் காணாமல் போனார். பிளாஸ்டிக் சர்ஜரி உபயம்.
வெண்ணிற ஆடை நிர்மலாவை இன்று டி.வியில் பார்த்த போது அவருக்கு மிகவும் ஜூனியரான ஸ்ரீதேவி பற்றி தோன்றியது - இவ்வளவு சீக்கிரம் கிழவியான நடிகை ஸ்ரீதேவியாகத் தான் இருக்கும்.
இப்படி அகாலமரணமும் தேவையில்லை.

.............................................

கூத்துப்பட்டறையில் R.P.ராஜநாயஹம்

95 வயது பெரியவருக்கு ராஜநாயஹம் டப்பிங்

$
0
0
பாலு மகேந்திராவின் சீடர் வியாசன் என்ற M.D.பசுபதி.
தன்னுடைய குரு பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பிரமாதமான ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

Breakdown என்று ஒரு குறும்படம் இயக்குகிறார். ஏற்காட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துள்ள ஒரு 95 வயது பெரியவர் ஒருவருக்கு நான் குரல் கொடுத்துள்ளேன்.



O mehabooba song - R.P.Rajanayahem

மூன்று குழந்தைகள்

$
0
0

நேற்றும் இன்றும் மயிலாப்பூர் அபிராமபுரம் ஆல்ஃபபெட் ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள். ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல் பார்ப்பது, மற்ற தியேட்டர் விஷயங்களை நேரடியாக தெரிந்து கொள்வது இவர்களுக்கு ப்ராஜெக்ட். இந்த பள்ளியில் முழுக்க கல்வி முறையே Activities தான். Text book என்பதே கிடையாது. 

யாத்ரா தனுஷ், சிம்பன் ஆறுமுகம், தருண் ஆகிய மூன்று குழந்தைகள்.
What you would like to become ? என்று நேற்று கேட்டேன். சிம்பன், தருண் இருவருமே “Foot ball player"என்று சொன்னார்கள். யாத்ரா பதில்: “ I have passion for football. But I would like to become an actor."
நான் Che sara, sara Whatever will be will be, The future is not ours to see பாடினேன்.
குழந்தைகள் சந்தோஷமாக கை தட்டினார்கள்.
KIt Kat சாக்லேட் கொடுத்தேன்.
இன்றும் வழக்கம் போல் அவர்களுடைய டீச்சர் ரேகா தான் அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்.
Rehearsal Process ஐ ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரேகா சொன்னார். யாத்ராவின் அப்பா தனுஷ். ரஜினியின் பேரன்.
யாத்ராவிடம் 'உனக்கு யார் பிடிக்கும்.'
"லதா பாட்டி. she is my favorite."
தாத்தா பாட்டிகளுக்கு எப்போதும் பேரக்குழந்தைகள் நண்பர்கள். அம்மா அப்பா ‘ நீங்கள் ரொம்ப செல்லம் கொடுக்கிறீர்கள்’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள் - நான் சொன்னதும் யாத்ரா அதை ஆமோதித்தான். அம்மா ஐஸ்வர்யா எப்போதும் பாட்டி லதாவிடம் இப்படி வருத்தப்படுவதுண்டாம்.
இன்னொரு பையன் சிம்பன் ஆறுமுகம் மறைந்த முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரவி ஆறுமுகத்தின் பேரன். ஆல்பர்ட் தியேட்டர் அதிபர் மது குமரனின் மகன்.
தருணுடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.
மூன்று குழந்தைகளுக்கும் இன்று கடைசி தினம் என்பது ரசிக்கவில்லை.
பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்று சென்றார்கள்.

..............................................
Viewing all 1892 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>