Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1852 articles
Browse latest View live

உனக்கு ஏன் கவலை? நான் வந்து விட்டேன்

$
0
0


இல்லையே இல்லையே என்று ஏங்கிக்கொண்டே இருப்பதற்காகவா ஜன்மம் எடுத்தோம்?

சாருதத்தன் தூக்கு மேடைக்குப் போகும்பொழுது, ‘வறுமையே, நான் செத்துப்போவதைப் பற்றிச் சற்றுக்கூட வருந்தவில்லை. உன்னை நினைத்தால் தான் எனக்குத் துன்பம் உண்டாகிறது. ஐயோ, நான் போய் விட்டால் உனக்கு நெருங்கிய நண்பன் வேறு யார் இந்த உலகத்தில் கிடைக்கப்போகிறான்?’என்று. தரித்திரத்தை அனாதையாக விட்டு விட்டுப் போவதை நினைத்துப் புலம்பினான்.
“ சாருதத்தா, உனக்கு ஏன் கவலை? நான் வந்து விட்டேன். நீ போய் விட்டால் சிநேகத்திற்கே பஞ்சம் வந்து விடுமென்று நினைந்து விட்டாயே.”
- தி.ஜானகிராமன்
‘ நானும் எம்டனும்’ சிறுகதையில்


He is poor, and that's revenge enough.
- Shakespeare
in Timon of Athens

'Famine is in thy cheeks,
Need and oppression starveth in thine eyes,
Contempt and beggary hang upon thy back;
The world is not thy friend nor the world’s law:
The world affords no law to make thee rich;
- Shakespeare in Romeo and Juliet

”பழைய கணக்கு”

$
0
0

தி.மு.கவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார். 
அ.தி.மு.க திண்டுக்கல் இடைத்தேர்தல் அமோக வெற்றிக்கு பின் காமராஜர் வெறுத்துப்போய் 
“ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்” என்று சொன்னது தீர்க்கதரிசனம்.


பவ்யம் பாவ்லா

$
0
0

நல்ல வசதியான நண்பர். அவருடைய மகன் படிப்பில் அவ்வளவு சுட்டியாய் இல்லை என்பதை விட படிப்புக்கு அவன் தயாராயில்லை என்பது தான் உண்மை. 
நான் அந்த நண்பரிடமும் அவர் மனைவியிடமும் சொல்வேன். ’பையன சேட்ட பண்ணா கண்டிக்கலாம் தப்பில்ல... ஆனா படிக்கலன்னு மட்டும் திட்டாதீங்க..கண்டிக்காதீங்க. பாவம்.. அது Gene. ஒங்க பரம்பரைக்கு அப்படி ஒரு கொற.”
”ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் கல்வியறிவில்லையே!” என்று அங்கலாய்ப்பாக கிண்டல் செய்வேன்.
ஒரு நாள் அவர் வீட்டிற்குள் நுழையும் போது மகனுக்கு வாத்தியார் ஒருவர் ட்யூசன் சொல்லிக்கொண்டிருந்தார்.
பையன் அவரிடம் பவ்யமாக “ நல்லா புரியுது சார்!” என்று சொல்லி விட்டு என்னைப்பார்த்து
“ கண்டுக்காதீங்க அங்க்கிள். எல்லாம் சும்மா ஒரு டாவு தான். எல்லாம் தோடு ...பாவ்லா...” என்கிற அர்த்தத்தில் தலையை திருப்பி ஒரு கண் அடித்தான். Winking!
படிப்பு விளங்கும்?? உருப்புடும்??

ஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை

$
0
0
எனக்கு பெற்றவர்கள் வைத்த பெயர் ரொம்ப நீளமானது. அதைத் தான் சுருக்கி பிரமிள் மாற்றி வைத்தார்.
என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இருந்த ரொம்ப நீளமான பெயருக்கான நியூமராலஜி குறிப்பு இப்போது நினைத்துப்பார்த்தால் என் வாழ்வின் வடிவத்தை குறியீடாகச்சொல்வது போலத்தான் இருக்கிறது.
‘அற்புதம் நிறைந்தது.
எல்லாவிதமான பந்தங்களில் இருந்தும் விடுவிக்கக்கூடியது. பூட்டுக்களும் திறந்துகொள்ளும். பூட்டப்பட்ட விலங்குகளும் தெறித்துப்போய் விடும். மாயம் போல் செல்வச்சிறப்பு மறைந்து போய்விடும்.’

மதம், ஜாதி, உறவு எல்லாவற்றையும் என் வாழ்வு உதறியிருக்கிறது. ரத்த உறவுகளையும் மனைவி வழியில் வாய்த்த கிளை உறவுகளையும் என்னை நெருங்கவே முடியாதவாறு தூக்கி எறிந்து விட்டேன்.
முப்பது வருடங்களுக்கு மேலாக எவ்வளவோ திருமணங்கள், கிரஹப்ரவேசம், கடை திறப்பு விழா..பிறந்த நாள் விழா.. இன்னும் என்னன்ன உண்டோ நான் செய்திருக்கிற மொய் கொஞ்சநஞ்சமல்ல. 1980களிலேயே 100 ரூபாய்க்கு குறைந்து எந்த மங்கல நிகழ்ச்சியிலும் செய்ததேயில்லை. நெருங்கிய உறவுகள் பலவற்றின் திருமண நிகழ்வுகளுக்கு அப்போதே 300 ரூபாய் என்று மொய் வைத்து ஏனோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறேன். தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் பத்திரிக்கை வைத்தால் பெருமொய் தான்.
என் மகன்கள் இருவர் திருமணத்திற்கு உறவினர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கிடையாது. 


என் சார்பாக நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், வலைத்தள நண்பர்கள், வாசக அன்பர்கள் என்று யாருக்கும் அழைப்பு கிடையாது.
இது அபூர்வம். யோசித்துப் பார்க்கையில் என் சொந்த பந்தத்தில் இப்படி நடந்ததே இல்லை.
எளிமையாக திருமணம் நடக்க வேண்டும் என்பதில் ஒரு வைராக்கியம் எனக்கு ஏற்பட்டு விட்டது.
திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாலே அதை எதிர்கொள்வதில் எல்லோருக்கும் எந்திரத்தனம் வந்து விட்டது.
’ஒரே நாளில் மூன்று பத்திரிக்கை வந்து விட்டதே. தொர வேற மகனுங்களுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை வச்சிட்டான்’ என்று ஒரு ஆயாசம் தான் நிச்சயம்.
யார் மீதும் கோபம் இல்லை. வருத்தம் இல்லை. உறவுகளோ நண்பர்களோ யார் மீதும் வருத்தம் இல்லை. யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் யாரையும் அழைக்கவில்லை.
மகன்களின் மணப்பெண்கள் குடும்பங்கள் திருமணத்தில் முழுமையாக பங்கேற்றாலும் என் வழியில் யாருக்கும் அழைப்பு இல்லை என்பதை சம்பந்தி குடும்பங்களுக்கு தெளிவு படுத்தி விட்டேன்.
ஜூலை 1ம் தேதி இளைய மகன் திருமணம் சுந்தர பாண்டிய புரத்தில் நடந்து முடிந்து விட்டது. இதோ ஜூலை 29ம் தேதி விழுப்புரத்தில் மூத்த மகன் திருமணம்.
இரு மகன்களும் காதல் திருமணம் தான்.

.......................................


எம்.ஜி.ஆர் காலமான தினம்

$
0
0


இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.
எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கிலை யாரும் முன் கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்க மாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச்சின்னங்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினம் இந்தத் துக்கச்சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது.
தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால், பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி, பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச்சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர்கள் உடலை மருத்துவ மனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது.
யாரிடம் எதற்கு அனுமதி?
“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”
”எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”
”அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”
“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம் தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”
அப்பா பிணவறையில் இருந்து எழுந்து நடந்து போனார்.

- அசோகமித்திரன் “ யுத்தங்களுக்கிடையில்..” நாவலில்



..........................

சந்தேக தாமஸ் கேள்விகள்

$
0
0
ஆத்திமூக்காக்காரர்கள் தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டாலின் செயல்பாடு போற்றப்படுகிறது. தன் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு, நேரில் போய் ஆறுதல் கூறுகிறார்.
எதிர் கட்சித்தலைவராக இருக்கும் போது இப்படி செய்யும் ஸ்டாலின் நாளை ஆட்சியை கைப்பற்றிய பின் இந்த கண்ணியத்தை கடைப்பிடிப்பார் என்று உறுதி சொல்ல முடியுமா? ஏனென்றால் Politician out of power is a different species.
When the devil is sick, it would be a saint.
இவர் முதல்வராய் இருக்கும் போது, இந்த வன்முறை நடந்த பின் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போன்றவர்கள் பிரியாணி கடை, போலீஸ் என்று இரு பக்கத்திலும் தங்கள் பவரை காட்ட முடியாத படி ஸ்டாலின் மூக்கணாங்கயிறு போடுவாரா? அரெஸ்ட் செய்யமுடியாத படி குற்றவாளிகள் தலைமறைவாக கட்சி மேல் மூடிகளே உதவாத படி தடுப்பாரா?
இன்றைய நிலவரத்தில் அடுத்து ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு தி.மு.கவுக்கு தான்.
இப்போதே அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க குடும்ப சொந்தங்கள் வற்புறுத்துகின்றதாக தகவல்.
அழகிரிக்கு கட்சியில் இடம் கொடுத்த பின் ஸ்டாலின் ஆட்சியில் மதுரையில் அராஜகம் நடக்காது என்று உத்தரவாதம் தரமுடியுமா? அப்படி மதுரையில் அழகிரி அடிப்பொடிகள் தடியெடுத்து தண்டல்காரர்களாக மாறினால் அண்ணனையோ, மதுரை ரௌடித்தனத்தையோ கண்டிக்கிற பேராண்மை அவருக்கு இருக்குமா?
ஏன்னா, ஏயன்னா, போன தடவ தீமூக்கா ஆட்சியில ஸ்டாலினே மதுரைக்குள்ள போக சிரமப்பட்டாரு.

சோரம் செய்யாமல், தீமை செய்யாமல் ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்துமில்லை என்று தான் பாரதி சொல்லியிருக்கிறான்.

காவன்னா காளிமுத்து

$
0
0

கா.காளிமுத்து சிவகாசி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்த போதெல்லாம் கூட மதுரையில் ஒரு டுட்டோரியல் கல்லூரி(VTC)யில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் பிரபலமானதெல்லாம் தி.மு.கவிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தபோது தான்.
தி.மு.கவையே எம்.ஜி.ஆர் கட்சி என்று தான் பாமர மக்கள் சொல்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த தி.மு.க ஸ்தாபகர் அண்ணாத்துரையிடம் விராலிமலையில் வெள்ளந்தியாக பாமர அம்மையார் ஒருவர்
“ நீங்க எம்.ஜி.ஆர் கட்சி தான?” என்று கேட்டதுண்டு.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாணி தொனியில் ஆர்.எஸ்.மனோகர் போல தோளை குலுக்கி காளிமுத்து மேடையில் பேசுவார். சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அடுக்கி பேசி எல்லா கூட்டங்களிலும் பலத்த கைத்தட்டல் வாங்குவார். Soap box orator.

இரண்டாம் திருமணம் செய்தவர்.

என் மாமனார் எஸ்.எம்.டி. சந்திரனிடம் பல உபகாரங்கள் பெற்றவர். எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த போது பொருளாதாரத்தில் காளிமுத்து மிகவும் பின் தங்கியிருந்த நிலை.

மேற்கு முகவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த என் மாமா தன் சொத்தில் இருந்து கட்சிக்கு செலவழித்தவர்.
நிர்மலா காளிமுத்து அப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன நிலையில் என் மாமா ஒரு கனமான ரெட்டை வட செயினை காளிமுத்துவிடம் கொடுத்து, அதை மம்சாபுரம் அறிவரசன் மூலமாக அடகு வைத்து அந்த பணத்தில் தான் ஆஸ்பத்திரி செலவை சமாளித்தார். நகையை திருப்பி தரவில்லை. நகை மதிப்பு பெரிய அளவிலானது. அந்த நகையை அடகிலிருந்து மீட்க காளிமுத்து அக்கறை காட்டவில்லை.
அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்திராத காலம். இந்த சம்பவமே 1977க்கு முன் நடந்த விஷயம்.

என் மாமா பெரிய முரடர். காளிமுத்துவிடம் கேட்கும்போது “ திருப்பி தந்து விடுகிறேன், அண்ணாச்சி” என்று பவ்யமாக சொல்லியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் ராமாவரம் தோட்டத்திற்கு போய் எம்.ஜி.ஆரிடமே என் மாமா நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் கோபமாகி உடனே காளிமுத்துவை தோட்டத்திற்கு வரவழைத்து ’உடனே சந்திரனிடம் வாங்கிய நகையை திருப்பிக்கொடு’ என்று டோஸ் விட்டார்.
நகை திருப்பப்பட்டு என் மாமா கைக்கு வந்தது. ஒரு கசப்பான நிகழ்வு தான்.
காவன்னா பற்றி என் மாமா வேடிக்கையாக பின்னாளில் சொல்வார்.
“வேலக்காரிய கூட ‘வர்றியா’ன்னு கேக்க மாட்டான். ’என்ன கட்டிக்கிறியா?’ன்னு தான் கேப்பான்.”
1977க்கு பின்னர் காளிமுத்து ஊராட்சி துறை மந்திரியாகி, 1980ல் விவசாய அமைச்சராக இருந்த நேரத்தில் தாமரைக்கனி எம்.எல்.ஏ ரொம்ப பிரபலம். அப்போது என் மாமனாரிடம் காளிமுத்து “ என்ன அண்ணாச்சி, சும்மா இருந்த பயலை பெரிய ஆளாக்கி விட்டுட்டீங்க. அவன் காமராஜ் நாடார விட பெரிய ஆளாயிடுவான் போல இருக்கு.” என்று அங்கலாய்ப்பாக கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டே ஸ்ரீவில்லிபுத்தூரில் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர் காளிமுத்து. மூன்றாவது பீரியடில் கூட விவசாய மந்திரியாக இருந்தார்.
துக்ளக் சோ தன் பத்திரிக்கையில் அடுத்த திராவிட தலைவராக காளிமுத்துவை கணித்து எழுதியிருந்தார். கேள்வி பதிலில் கூட இப்படி சொல்வார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை.
1989ம் ஆண்டில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரை நான் மதுரை ரயில் நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என்னைக் காட்டி ஒரு வக்கீல் “ மாமா, ராஜநாயஹம் யார் தெரியுமா? எஸ்.எம்.டி.சந்திரனின் மருமகன்” என்றார்.
அப்போது என் மாமனார் இறந்து இரண்டாவது வருடம். காளிமுத்து என்னை ரயில் நிலைய ஓய்வறைக்கு அழைத்து சென்று ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். “சந்திரனுக்கு நீங்க மருமகன்னா எனக்கும் மருமகன் தான். நானும் சந்திரனும் சகோதரர்களை விட நெருக்கமான நேசம் பாராட்டியவர்கள். உங்க மாமாவ என்னால மறக்க முடியுமா? எனக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கார் தெரியுமா?” என்றார்.
ஜெயலலிதாவை வறுத்து எடுத்தவர். வசந்த சேனையென்று தாக்கினார். காளிமுத்து பயன் படுத்தியதால் பிரபலமான ஒரு பழைய சொலவடை “கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது.”
ஜெயலலிதாவுடன் சமாதானமாகி, சமாதானமாகி என்ன, சரண்டர் ஆனார்.
ஜெயலலிதாவுக்கு முதல்வராவதில் சட்ட சிக்கல் நேரத்தில் சபாநாயகராயிருந்த தன்னை முதல்வர் ஆக்க மாட்டாரா என்று தவித்தார். ஆனால் பன்னீர் செல்வம் முதல்வர் என்பதை காரில் போகும்போது ரேடியோவில் செய்தியாக அறிந்த போது உடைந்து போனவர் தான். தனக்கு ஜெயலலிதா இழைத்த பெருத்த அவமானமாக இதை கருதினார். அதன் பின் அவர் உடல்நிலையும் மோசாகியது. இந்த அதிர்ச்சி தான் அவர் மரணத்தை துரிதப்படுத்தியது.
…………………………………

Miracles Just happen

$
0
0

மதியமும் இல்லாத மாலையும் இல்லாத மயக்க பொழுதில் சின்மயா நகர் பஸ் ஸ்டாப்பில் நான். பஸ் வரவில்லை. ஷேர் ஆட்டோ எதிலும் இடம் இல்லை.
ஒரு ஸ்கூட்டர் இளைஞனிடம் லிஃப்ட் கேட்டேன். உடனே அவர் நிறுத்தினார். நான் இரைஞ்சலாக ’பஸ் வரவில்லை’ என்று விளக்கமுனையுமுன்னே “ நீங்கள் ராஜநாயஹம் சார் தானே?” என்று முகம் மலர்ந்தார்.”உங்களை படிக்கும் வாசகன் நான்”
“எப்படி என்னை அடையாளம் கண்டீர்கள்?”
”உங்களை தொடர்ந்து படிப்பவனுக்கு அது சிரமமான விஷயம் இல்லை”
ஸ்கூட்டரில் ஏறிக்கொண்ட பின் தெரிய வந்தது - அவர் பெயர் சாமிநாதன் ராமசாமி. திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். நாளை அவர் எடுக்க இருக்கும் ஷார்ட் ஃப்லிம்க்காக கிண்டியில் ஆர்ட் டைரக்சனுக்காக செலவு செய்துள்ள நிலை. நாளை ஷூட்டிங் கேன்சல் ஆனால் நிறைய நஷ்டம். அந்த நிலையில் அது விஷயமாக அலையும் நிலையில் எனக்கு லிஃப்ட் கொடுக்கிறார். எனக்கு கவலை கூடி விட்டது.
’ இந்த ஷூட்டிங் பிரச்னை இல்லாவிட்டால் உங்களை ஆலப்பாக்கம் வந்து வீட்டிலேயெ விட்டிருப்பேன். ’ என்று வேதனையோடு வருத்தப்பட்ட்டார். நான் அவரைத் தேற்றி என்னை ஆற்காட் ரோட்டில் என்னை இறக்கி விட்டால் போதும் என்றேன்.
வேம்புலிஅம்மன் கோவில் வரை நடந்து வந்தேன். பஸ் கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோ ஒன்றில் கூட ஏறவே முடியவில்லை.
ஒரு டாக்ஸி வந்து நின்றது. போரூரா சார் என்று அதில் இருந்த மூன்று இளைஞர்கள் கேட்டனர். ”நான் ஆலப்பாக்கம் போக வேண்டும். ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கிக்கொள்கிறேன்.” என்றேன். கதவை திறந்து ’ஏறுங்க சார்’ என்று ஒரு இளைஞன் சொன்னான். “ நீங்க புண்ணியம் நிறைய செய்திருப்பீர்கள். சரிதானே.” என்றான். என்னிடம் வார்த்தையில்லை.
”சாருக்கு ஏசியை போடு” 
கார் விண்டோக்களை ஏற்றினார்கள் இருவர்.

வளசரவாக்கம் தாண்டி ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கி ரோட்டை குறுக்கே தாண்டி ஆலப்பாக்கம் ரோட்டில் நுழைந்தேன்.
பால் வாங்குவது, ரொட்டி வாங்குவது, தக்காளி,பச்சை மிளகாய், தேங்காய், முட்டை வாங்குவது எல்லாம் இவ்வளவு சவாலான விஷயமா?!
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
மு.கருணாநிதி மரண செய்தி வெளியிடப்படுமுன்னரே வீட்டுக்குள் நுழைந்தேன்.

......................................


அவர் தான் கலைஞர். பார். அவர் தான் கலைஞர்!

$
0
0

தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பலத்த அடி. சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விட்ட நிலை.எம்.ஜி.ஆருக்கெதிரான மு.கருணாநிதியின் மகத்தான முதல் வெற்றி. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானவுடன் எம்.ஜி.ஆர் ஆட்சி டிஸ்மிஸ்.
தலைப்பு செய்திக்கு பொருத்தமாக ஏதாவது எழுதவேண்டும் என்று மதுரை ஏ.ஏ. ரோட்டில் தி.மு.க தோழர்கள் என்னிடம் கேட்டனர்.தி.மு.க.மன்றத்தின் முகப்பில் ஒரு போர்டு. அதில் அவ்வப்போது ஏதேனும் எழுதிப் போடுவது மன்றத்தாரின் வழக்கம்.
எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வது போல வாசங்கள் ஏதேனும் சொல்ல முடியுமா? நான் யோசிக்காமலே என் நினைவில் தெளிவாய் இருந்த ஒரு கவிதையின் வரிகளை அவர்களிடம் எழுதிப்போடச் சொன்னேன். ”உங்கள் தலைவர் முன்னரே எழுதிய கவிதையொன்றின் ஒரு நான்கு வரிகள் தான் இவை. இதனை மன்றத்தின் போர்டில் எழுதுங்கள். எழுதி அவர் பெயரை போடுங்கள்.”அந்த வரிகள்
“ மான் போட்ட கணக்கை வேங்கை அழித்து விடும்.ஏன் போட்டாய் தப்புக்கணக்கென்று வேங்கையை வேடன் வீழ்த்திடுவான்.இது தான் உலகு”
ஏ.ஏ. ரோட்டில் பலரும் நின்று நின்று இந்த மு.க.வின் கவிதை வரிகளை எம்.ஜி.ஆர் அரசு டிஸ்மிஸ் ஆன அன்று வாசித்து சென்றார்கள். அந்த அரசியல் சூழலுக்கு மிகப்பொருத்தமான வரிகள் கருணாநிதி முன் எப்போதோ எழுதியவை. கரகரத்த குரலில் அவர் சொல்வது போலவே இருக்கிறதல்லவா?
………………………………………………………….



முதல் முறை முதல்வராய் மு.க இருந்த போது அவர் கவிதை வாசித்த ஒரு கவியரங்கம். குன்றக்குடி அடிகளார் தலைமை.
தமிழக முதல்வர் கவிதை வாசித்தார்.“எனக்கிருக்கும் எத்தனையோ வேலைகளில் இதுவும் ஒன்று என கிறுக்கும் என்னை ஈங்கழைத்தார் பெருந்தவக்கிறுக்கர்” என்று ஆரம்பித்தவுடன் ஆரவாரம் எப்படியிருந்திருக்கும்?
ஒரு சம்பவம் ஒன்றை விவரித்தார். வள்ளியை தேடி முருகன் மலையேறுகிறான். அப்போது எதிர்ப்பட்ட முதியவர்கள் சிலரிடம் வள்ளியெங்கே என்று கேட்கிறான். மலையுச்சிக்கு சென்றால் காணலாம் என வயதானவர்கள் சொல்கிறார்கள்.
மலையுச்சிக்கு செல்கிறான் முருகன். மு.க சொல்கிறார். “கண்டவிடமெல்லாம் வள்ளிக்கிழங்கு! கிழங்களின் குறும்பு தான் என்னே! வள்ளியெங்கே என்று கேட்டால் கிழங்கினை காட்டி விட்டு சென்று விட்டார்களே!”
இந்த கவியரங்கத்திலோ அல்லது வேறு கவியரங்கம் ஒன்றிலோநிலா, தென்றல் ஆகிய தலைப்பில் கவிதை வாசிக்க வேண்டிய இருவர் வரவில்லையாம். மு.க. வின் கிண்டலான எதிர்வினை: “கவியரங்க விழா பகலில் நடப்பதால் நிலா வரவில்லை. கவியரங்கம் குளிர் சாதன அறையில் நடப்பதால் தென்றலும் இங்கே நுழையவில்லை”

நக்கீரனில் ராதாரவி கர்ஜனை

$
0
0

ராதாரவியின் ’கர்ஜனை’ நக்கீரன் தொடர். நூறு வாரங்கள் தாண்டி விட்டது. நான் சமீபத்தில் ஒரு இருபது வாரங்களாகத்தான் பார்க்கிறேன். நல்ல சுவாரசியமான சினிமா அனுபவங்கள்.
விஜயகாந்த், டி.ராஜேந்தர், பிரபு, கார்த்திக், சந்திரசேகர் இன்னும், இன்னும் பலர் படங்களில் இவர் நடித்திருப்பதைக் குறிப்பிட்டு அவையெல்லாம் வெற்றிப்படங்கள் என்கிறார் ராதாரவி. ரொம்ப பூரிப்புடன் இப்படிசொல்கிறார்.
அந்த படங்கள் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. தமிழில் ஓரளவு நல்ல படங்களாக தேர்ந்து எடுத்து பார்த்தவன் நான். கமல் படங்கள் மீது தான் அதிக விருப்பம். முக்கிய உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள் இப்படி கவனம் இருந்ததால் ராதாரவி நடித்திருக்கிற அந்த வெற்றிப் படங்கள் நான் பார்த்ததில்லை.
ஒன்று தெரிகிறது. அன்று தமிழின் நல்ல தரமான படங்களில் ராதாரவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது திரையுலக சூழல் மாறியுள்ளதால் மிஸ்கின் படத்தில் கூட அவரால் நடிக்க முடிந்திருக்கிறது.
ராதாரவியின் சினிமாவுலக அனுபவங்கள் படிப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. ராதாரவி நடித்த இந்த மாதிரி படங்கள் தான் கடந்த காலத்தில் தமிழின் சிறந்த படங்கள் என்று ஒரு கத்துக்குட்டி நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ராதாரவி பல படங்களில் தன் நடிப்பைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படியொன்றும் பாத்திரஙகளை கையாண்டவரில்லை. மெருகூட்டியவரும் அல்ல.
எம்.ஆர்.ராதாவின் திறன் மிக்க நடிப்பு வேறு. ராதாரவி நடிப்பு வேறு.
எம்.ஆர்.ராதா சீரியஸ் ரோல் செய்யமாட்டார். ஆனால் எம்.ஆர்.ஆர்.வாசு குணச்சித்திர நடிப்பிலும் முயற்சித்தார்.
ராதாவின் வக்கிர நடிப்பை அவருக்கு பின் வெளிப்படுத்தியவர்கள் வில்லன் சத்யராஜும், மணிவண்ணனும் தான். மணிவண்ணன் என்ன பிரமாதமான ஃபார்மில் இருந்தார்.
வில்லன் நடிப்பில் கூட ரகுவரன், பிரகாஷ்ராஜ் தரத்திற்கு, அருகில் ராதாரவி நிற்க முடியுமா?

ராதாரவியின் நக்கீரன் கட்டுரையில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. பல செய்தி புத்தம்புதியவை.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஆரம்ப காட்சி. ’என்ன பார்வை, உந்தன் பார்வை’ பாட்டில் வரும் அந்த Open top Convertible car! சிவப்பு நிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் எம்.ஆர் ராதாவுடையதாம். அவரிடம் கேட்டுப் பெற்று இயக்குனர் ஸ்ரீதர் பயன் படுத்தியிருக்கிறார்.
இந்த காரில் எம்.ஆர்.ராதா வைக்கோல் போர் ஒரு முறை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதை வைத்து உலவும் பிரபல வதந்தி கட்டுக்கதை. வைக்கோல் போர் வேண்டும் என்று மனைவி கேட்டுக்கொண்டதால் அவசரத்திற்கு காரில் ஏற்றியிருக்கிறார். வேறு Motive எதுவும் கிடையாது என்ற உண்மை ராதாரவி மூலம் தெரிய வந்திருக்கிறது.
கருணாநிதி உட்பட டணால் தங்கவேலு வரை எல்லோரையுமே ராதாரவி பாசத்துடன் அப்பா என்றே சொல்கிறார்.
டி.எஸ்.பாலையாவை பெரியப்பா என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவை விட ஏழு வயது இளையவர். ( நான் தான் பாலையா நூற்றாண்டின் போது தமிழ் இந்து பத்திரிக்கையில் 2014ல் அவருக்கு அஞ்சலி கட்டுரை எழுதியவன்.)
ஜுனியர் பாலையா தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு சீனியர். ஆனால் ராதா மகன் யோகக்காரர். அவருக்கு சினிமாவுலகிலும் அரசியலிலும் நல்ல அந்தஸ்து கிடைத்தது.
........................................

’எச்ச’ எங்கெங்கும், எப்போதும்,

$
0
0


மனுஷ்ய புத்திரன் மீது ஹெச்.ராஜா பாய்ந்திருப்பதை அறியும் போது எனக்கு 2002ம் ஆண்டு நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எச்சத்தனம் அரசியல் உலகில் மட்டுமல்ல முதிர்ந்த ஞான இலக்கிய சாகரத்திலும் உண்டு. எங்கெங்கும், எப்போதுமான சாசுவத விஷயம்.
ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் ஒரு எதிர் அழகியலை( தளையசிங்கத்தின் “ தொழுகை” சிறுகதை) முன்வைத்த போது நான் ஒரு எதிர் அழகியலை முன் வைத்தேன். அது ஏற்படுத்திய சர்ச்சை அப்போது பிரபலம். நான் எழுதிய “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் வாசித்தேன். அந்த கட்டுரை லாஸ் ஏஞ்சல்ஸ் இணைய இதழ் திண்ணை.காம், காலச்சுவடு 42வது இதழ் இரண்டிலும் அவரவர் வசதிக்கு எடிட் செய்யப்பட்டு வெளி வந்தது. அப்போது மனுஷ்யபுத்திரன் காலச்சுவடு ஆசிரியக்குழுவில் இருந்தார்.
சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்'என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக துப்பறிந்து எழுதியிருந்ததை இப்போதும் மறக்க முடியுமா?
ஒரே ரகம் தான். ஒரே முகம்.
Both are cut from the same cloth. They are two peas from the same pod.

ராஜநாயஹம் எழுதுவது

$
0
0



ராஜநாயஹம் எழுதுவது
 வானில் நிலவு, நட்சத்திரங்களை மறைக்கும் மேகம் சிறகால் வருடுவது போல, பூச்சொரிதல் போல தூறலாய் பொழியும் சாரல்.

மீன் நீரில் நீந்தும் வழியை இதுவென்று எப்படி வகுக்க முடியாதோ, வானில் சிறகடிக்கும் பறவையின் பாதையை எப்படி நிர்ணயிக்க முடியாதோ அப்படித்தான் ராஜநாயஹம் வாழ்வும் எழுத்தும்.

 எழுத்தின் உள்ளடக்கம் பன்முகமாய் விரியும் தூரிகையின் வண்ண ஓவியமா?    
சீரான நீரோட்டம் காணாத நுரைத்துப் புடைக்கும் புனலா?
சிக்கலான இழைகளா? மணல் கோடுகளாய் பல் வேறு பத்திகள்.

 குளிர்ந்த பின்னிய மேகச்சடையின் சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன் எடுத்துக்கூறுவது தான் என்ன?

காலத்தின் அசுர உருவத்தை சிமிழில் அடைக்கும் முயற்சி தானா  என் எழுத்து?  நெகிழ்ந்த ’பாந்தவ்ய சிரிப்பு’ கூடிய வாக்கிய ஆலாபனையா?
நெஞ்சை அமுக்கி வலிக்கும் புண் தான் இந்த வார்த்தைகளின் அணிவகுப்பு. வீரிய வாசகம்.

பிரம்ம தண்டத்தை தலையில் வைத்தாற் போல சொல்லப்பட்ட ரிஷி வாக்கு இது என்ற பிரமை ஏதும் எனக்கில்லை. ஆனாலும் தழல் வீரம் காட்டும் உக்கிரம் இந்த என் சொல் சித்திரங்கள்.
ராகம் என்னவென்று கண்டுபிடிக்க சிரமமான சங்கீதம்.

வாழ்க்கையின் குரங்குத்தனத்திற்கு கட்டுப்பாடு இல்லையெனில் எழுத்தின் குரங்குத்தனத்திற்கும் அப்படியே தான்.

தன்முனைப்பு  அற்ற கவனக்குவிப்பு.

பரிச்சயம், பழக்கமில்லாதவர்களின் உணர்வுகளை சிராய்த்து காயப்படுத்தும் புதுமை.

சொல்வது என்ன என்பது முதல் தடவை முற்றாக புரிந்து விடுவதில்லை என்பதனாலேயே மீண்டும் படிக்க வேண்டியிருக்கிற எழுத்து.

எழுத்து என்பதே அவஸ்தை தான். சமூகத்திலிருந்து விலக்கப்படுதல் என்பதை விட விலகுதல். பிரிக்கப்படுதல் என்பதல்லாமல் பிரிதல். யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.
நகுலன் சொல்வது போல தனியாக இருக்கத்தெரியாதவன் எவனும் எழுத்தாளனே அல்லவே.




கோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்

$
0
0

பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி என்னிடம் 
“இவன் என் தம்பிடா. பாண்டிச்சேரி நாடகத்துறையில் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறான்.


ஒரு பத்திரிக்கையில் அப்போது என்னைப்பற்றி அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், மணிக்கொடி சிட்டி, புதுவை முன்னாள் துணை வேந்தர் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகியிருந்தது. அதன் நகல் ஒன்றை கோணங்கியிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவனை சந்தித்த போது என்னிடம் சொன்னான். “ என் தம்பி கிட்ட அதை கொடுத்தேன். அவன் சொன்னான் ‘இந்த ஆளை இவங்க நல்லா மொட்டை அடிச்சிருக்காங்க.’
உண்மையில் ஜாம்பவான்கள் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் பற்றி விளக்குவது என்றால் ஒவ்வொன்றுமே ஒரு சிறுகதை போல விரியும்.
ஆனால் கோணங்கி இப்படி மட்டையடி தான் அடிப்பான். 


கோணங்கிக்கு நான் எவ்வளவோ செலவழித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் என்னை மொட்டையடித்தது என்றால் அதில் பிரதான இடம் கோணங்கிக்கு உண்டு தான்.

திருப்பூரில் இருந்த நாட்களில் ஒரு முறை நான் போன் பேசிய போது கோணங்கி சொன்னான் “தமிழ்நாட்டில ஒருத்தன் திருப்பூருக்கு போயிட்டான்னா அவன் அகதின்னு தான் அர்த்தம். ராஜநாயஹம் நீ அகதி ஆயிட்டியேப்பா.”

இப்படி என்னிடம் பல சலுகைகள் அனுபவித்த ஒருவர் பேசுவது எரிச்சலாக இல்லையா என்றால் இல்லை.  இல்லவே இல்லை


ஒரு பத்திரிக்கையில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். தனுஷ்கோடியில் கோணங்கி தன் அம்மாவை நினைத்து கதறி அழுததாக.

‘என் பிள்ளை அழுங்குரல் கேட்குதே’ என்று கடலம்மையாய் அலைகள் தவித்திருக்கும் வாசக ஷற்புத்திரரே.
”சிருஷ்டியின் எண்ணற்ற மாய உருக்கள் தோற்றத்திலும் மொழியிலும் வடிவமாகக் கூடுகிறதே” என்பான் கோணங்கி.
”அம்மா மறைந்துலவும் இந்நாட்களில் நைந்து போன ஹிருதய பூமியில் வளரும் மரத்தைப் பாதுக்காக்கவே அகதிப்பறவைகளின் உதிர் இறகுகளோடு திரிந்து கொண்டிருக்கிறேன்” என்பவை ச.முருகபூபதியின் வரிகள்.

Disfame - பேபி சாவித்திரி

$
0
0


பேபி சாவித்திரி
கைதி கண்ணாயிரம் படத்தில் பையனாக நடித்திருக்கும் பெண் குழந்தை பேபி சாவித்திரி. ”கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்” பாட்டு இன்றும் ரசிக்கப்படுகிறது.
நீங்காத நினைவு “ ஓஹோ, சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே” பாட்டில் குதிரையில் முன்னால் உட்கார்ந்து நடிக்கும் குழந்தை. “புது விதமான உலகத்திலே பொன்மயமான வீடமைப்போமே” என்று பெரிய கண்களால் சொல்லும் பேபி சாவித்திரி.
ஆயிரம் ரூபாய் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நடிக்கும் சிறுமி. 
A wondrous wonder!

அழகான களையான முகம். நளினமான பாவங்கள். இயல்பிலேயே நல்ல திறமையும் சூட்டிகையும்.

 இந்த குழந்தை ஏன் பெரிய பெண்ணானவுடன் கதாநாயகியாக நடிக்கவில்லை. பாவம், உணர்வு என்பதை பிரமாதமாக தாள கதி மாறாமல் பாடல் காட்சிகளில் வெளிப்படுத்திய குழந்தை. ஏன் நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. நடிப்பில் நல்ல டைமிங் இந்த குழந்தையிடமிருந்தது. டைம் தான் சரியில்லையோ?
Fame is the thirst of youth என்பான் லார்ட் பைரன். குழந்தைப் பருவம் தாண்டி நல்ல இளமையில் இந்த பெண்ணுக்கு அப்படி ஒரு தாகம் ஏற்படவே இல்லையா? Was she too cool to fool Fame?
அல்லது அவளுடைய கனவுகள் கிஸ்மிஸ் பழம் போல் சுருங்கிப் போய் விட்டதா?

It’s over, but it happened this way.  We know her name, not her story. Fickle and Elusive popularity.

பேபி சாவித்திரியின் மகள் என்று ஒரு சங்கீதா சுப்ரமண்யம் உண்டு. அவரை கண்டு பிடிக்க முடிந்தால் எவ்வளவோ விஷயங்கள் அறிய முடியும்.




சோஃபியா

$
0
0

தைரியலட்சுமி
மக்களின் குரல்

சோஃபியா
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டும்.
பேடிமையும் அடிமைச் சிறுமதியுமற்ற பெண்ணொன்று.
வாழ்கவென்று கூத்திடுவோமடா 

வெல்கவென்று கூத்திடுவோமடா


பாட்டுல டயலாக்

$
0
0

நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக, பாந்தமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் “முதல் மனிதன்”

$
0
0

When you refuse to accept anything but the best, often you will get it 
என்பது உண்மை.

"I know nothing more stupid than to die in an automobile accident."– Albert Camus.

வாகன விபத்தில் மரணம் என்பதன் அபத்தம் பற்றி உள்ளுணர்வு தான் ஆல்பெர் காம்யுவிற்கு சொன்னதோ? வாழ்க்கையின் அர்த்தமின்மை பற்றி அதிகம் சிந்தித்த ஒரு மனதில் இப்படியும் ஒரு எண்ணம்.

அந்நியன் நாவலில் காம்யு சொல்வது போல
‘ வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. முப்பதில் இறப்பதும் ஒன்று தான். எழுபதில் இறப்பதும் ஒன்று தான்.’
46 வயது ஆல்பர் காம்யு அந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது தற்செயல் அல்ல. ரஷ்ய ஒற்றர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியென்று சொல்லப்படுவதுண்டு. விபத்து நடந்த இடத்தில் அவருடைய முடிக்கப்படாத நாவலின் கையெழுத்துப்பிரதியும், ஒரு ட்ரெயின் டிக்கட்டும் கிடைத்தது.ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, நீட்ஷேயின் ’ஆனந்த அறிவியல்’ புத்தகமும் கூட.
முடிக்கப்படாத அந்த நாவல் “ முதல் மனிதன்” அவருடைய பால்ய பருவத்தைப்பற்றியும், அவருடைய தந்தையைப்பற்றிய காம்யுவின் தேடல் குறித்தும் பேசிய சுயசரிதைத்தன்மை கொண்டது. அவருடைய மற்ற படைப்புகளில் இருந்து வித்தியாசமான தன்மை ’முதல் மனிதன்’ கொண்டிருந்தது.

ஒரு கலைஞனின் குறைப்படைப்பு தான் எத்தனை சோகமானது. கீட்ஸின் ஹைப்பீரியன், லார்ட் பைரனின் டான் ஹுவான்..
Perhaps, Life is a fear and a dream.. என்ற ஜோசப் கான்ராடின் வார்த்தைகள்.
Camus was an obsessive womanizer.
சார்த்ர் மிகவும் உயர்வாய் சொன்ன காம்யுவின் ”வீழ்ச்சி” நாவல்.
வீழ்ச்சி க்லாமென்ஸ் சொல்வான்: "தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன். அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன்.”
பாரிஸில் வசதியான, மெத்தப்படித்தவர்கள் குடும்பத்தில், ஏராளமான புத்தகங்களுக்கிடையில் வளர்ந்தவர் ழான் பால் சார்த்ர். ஆனால் அல்ஜீரியாவில் ஒரு மோசமான வறுமை சூழ்ந்த பகுதியில் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தவர் ஆல்பர் காம்யு.
ஆல்பர் காம்யுவுக்கு 46 வயதில் இந்த நாவல் குறித்து பெரிய கனவும், உறுதியும் கூட இருந்திருக்கிறது. இது தான் தன்னுடைய ஆகச்சிறந்த படைப்பாக இருக்கப்போகிறது என்பதாக.
காம்யு மறைந்து 34 வருடங்களுக்குப் பின் அவர் மகள் இந்த முடிக்கப்படாத நாவலை வெளிக்கொண்டு வந்தார்.
அவர் இறந்த சமயத்தில் அவருடைய அல்ஜீரிய சிக்கல் பற்றிய அபிப்ராயங்கள் பற்றி வலது சாரி, இடதுசாரி அறிவுஜீவிகள் மிகுந்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலம் ( 1980-1985) காம்யு சொன்ன நியாங்களை புரிந்து கொண்டதாக ஆகியிருந்தது.
Algiers Slum Kid எப்படி 43 வயதில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க முடிந்தது?
ஆல்பர் காம்யு தன் பால்யத்தில், பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட வறுமை அளவிட முடியவே இல்லை.
ஒரு வயதில் தகப்பனை பறி கொடுத்த குழந்தை. அல்ஜீரியாவில் பிரஞ்சு குடியேறியான தகப்பன் பிரான்ஸைப் பார்த்ததேயில்லை. முதலாம் உலகப்போரில் சிப்பாயாக அதைப்பார்த்தார். அதைப் பார்த்ததும் கொல்லப்பட்டார்.
அப்பாவின் சமாதியில் முதல் முறையாக நாற்பது வயதில் காம்யு நிற்கும்போது அவர் இருபத்தொன்பது வயதில் இறந்திருப்பதை அறியும்போது தன்னை விட இளையவரான தந்தை முன் நிற்பதாக உணர்கிறார்.
அவருடைய அம்மா காது கேட்பதில் பிரச்னை உள்ளவர். கல்வியறிவில்லாதவர். அம்மாவும் இவரும் பாட்டியின் கட்டுப்பாட்டில். அம்மா வேலைக்காரியாக.
இந்த புத்தகத்தை ஒரு போதும் படிக்க இயலாத தன் தாய் ‘விதவை காம்யு’வுக்கு தான் சமர்ப்பித்திருக்கிறார் மகன்.
தன்னுடைய மௌனங்களில் ஒன்றே ஒன்றின் மூலமாகக்கூட தாயால் சொல்ல முடிந்ததை ஆயிரக்கணக்கான சொற்களின் மூலமாகக் கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாத மகன் காம்யு.
இங்கே உழைத்தால் தான் சாப்பாடு. Poverty is a fortress without drawbridges.
அல்ஜீரியாவில் பிரஞ்சுக்குடியேறிகளும் அராபியர்களும் இணைந்து வாழ நிர்ப்பந்த நிலை.
குடியேறிகளான முன்னோர்கள் பிரான்ஸில் இருந்து 1848ல் பயணப்பட்டு அல்ஜீரியாவின் போன் துறைமுகத்தில் இறங்கி அனுபவிக்கும் துயரங்களை காம்யுவால் சொல்லில் வடிக்க முடிந்திருக்கிறது.
அந்தப்பிரதேசத்தில் வேலை என்பது ஒரு உயர்ந்த பண்பாக இல்லாமல் சாவுக்கு இட்டுச் சென்ற அத்தியாவசியத்தேவையாகவே இருந்திருக்கிறது.
When the soul suffers too much, it develops a taste for misfortune.
சொல்லொணா துயரத்துடன் தான் காம்யுவின் தாய் தன் பிள்ளையிடம் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பரிவு காட்டுகிறாள். மாமா எர்னஸ்ட் கூட வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை தன் மருகனுக்கு காட்டுகிறார்.கறாரும் கண்டிப்புமான பாட்டி, ’தெய்வத்துளி’ போன்ற அவனுடைய அந்த அற்புதமான ஆசிரியர் பெர்னார். சிறுவன் ஆல்பர் காம்யு அவன் நண்பன் பியர், நூலகம், கால் பந்து விளையாட்டு போன்ற உன்னதங்கள்.
For all his life it could be kindness and love that made him cry, never pain or persecution.
இந்த ’முதல் மனிதன்’ கியான்னி அமெலியோ என்ற இத்தாலிய இயக்குனரின் நெறியாள்கையில் இட்டாலியன் ஃப்ரன்ச் திரைப்படமாக 2011ல் வந்திருக்கிறது.

பின் இணைப்பாக உள்ள குறிப்புகளை படிக்கும்போது சோகம் கவ்வுகிறது. ஆல்பர் காம்யுவுக்கு பெரிய திட்டம் இருந்திருக்கிறது.
'ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவதில் தான் எழுத்தாளனின் மேன்மை அடங்கியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை ஏற்றுக்கொள்வதில்'என்று நாவலுக்கான குறிப்புகளில் ஒன்றில் காம்யு சொல்கிறார்.
ஏனென்றால் பாசிசவாதிகள் தங்களைப் போலவே சிந்திப்பது தான், தாங்கள் சரியென்று நினைப்பது மட்டும் தான் எல்லோருக்குமான ’சுதந்திரம்’ என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்து விடும்போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது என்று காம்யுவின் டைரி சொல்கிறது.

தன்னுடைய வாழ்க்கைக்கான் காரண- காரியரீதியான நியாயங்களைத் தனக்கு கொடுத்திருந்த அதே சக்தி, அதே சோர்வில்லாத தாராளத்துடன் தான் முதுமையடைவதற்கும், கிளர்ச்சி செய்யாமல் சாவதற்கான நியாயத்தையும் அளிக்கும் என்பது ஆல்பர் காம்யுவின் குருட்டு நம்பிக்கை தான்?


2013ல் காம்யு நூற்றாண்டில் பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக ’முதல் மனிதன்’ பிரசுரிக்கப்பட்டுள்ளது.

https://rprajanayahem.blogspot.com/2017/08/blog-post_19.html

வள்ளியம்மாவும் வேலம்மாவும்

$
0
0

செய்துங்கநல்லூர்.
ஊரில் முதல் காரை வீடு அது தான்.
மாமியார் வீட்டில் இருக்கும் வேலம்மா இளைய மகனின் மனைவி.
வாசலில் “அம்மா, தாயே, புண்ணியவதி. சோறு போடுங்கம்மா”
வேலம்மா “ இருப்பா. இதோ வர்றேன்.”
சோறு எடுத்துக்கொண்டு போய் பிச்சைக்காரனுக்கு போடுகிறாள்.

மாமியார் வள்ளியம்மா “ ஏட்டி, உங்கப்பன் வீட்டு சோறா? என்னட்டி நெனச்சிக்கிட்டிருக்க? பெரிய தர்ம புத்திரன் மக..”
அடுத்த நாள் பிச்சைக்காரன் வருகிறான். ”அம்மா தாயே.”
வேலம்மா வாளாவிருக்கிறாள். Once bitten, twice shy.

“ பிச்சை போடும்மா மகராசி.”
வேலம்மா “ ஒன்னும் இல்லப்பா. போ.”
மாமியார் கையில் பேரக்குழந்தை துரை. ஒரு வயது.
“ ஏல, கொஞ்சம் நில்லு.”

வாசலுக்கு குழந்தையோடு வந்த வள்ளியம்மா  தன் மருமகள் வேலம்மாவை கை காட்டி பிச்சைக்காரனிடம் “ ஏம்ல.. இவ வாழ்ந்தாளா. இல்ல வாழ்ந்து கெட்டாளா. நில்லு. அவ சொன்னான்னு போயிடாத. இவ வாழ்ந்தாளா? வாழ்ந்து கெட்டாளா? வீடான வீட்டுல ஒன்னுமே இல்லன்றாளே, பாதகத்தி..”

உள்ளே போய் சோறு, ஆட்டுக்கறியோடு குழம்பு சட்டி நிறைய எடுத்து வந்து பிச்சைக்காரனின் திருவோட்டில் வழிய, வழிய போடுகிறாள்.

வெராண்டாவில் அமர்ந்திருக்கும் மாமனார் செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை குறும்பு புன்னகை புரிகிறார்.

“ ஏல..என்னல. கோட்டிக்காரப்பயலெ. மாமியாள கோவமூட்டி விடத் தான் நெதம் வருவியோல்ல.” என்று பிச்சைக்காரனைப் பார்த்து பொய்க்கோபத்துடன் கண்ணடிக்கிறார்.
மாமியார் வள்ளியம்மா என் ஆச்சி – அப்பாவின் அம்மா.
மருமகள் வேலம்மா என்னை பெற்ற அம்மா.
ஆச்சி கையில் இருந்த ஒரு வயது குழந்தை துரை நான் தான்.










அமேசான் கிண்டிலில் R.P.ராஜநாயஹம் நூல் “தூறலாய் சாரல்”

$
0
0

அமேசான் கிண்டிலில் என் நூல் “தூறலாய் சாரல்”.
இதை சாத்தியப்படுத்திய திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என் நன்றிக்குரியவர்கள்.
அன்பு என்னை அசௌகரியப்படுத்தி உடைந்து கண் கலங்கச்செய்து விடும்.
நான் கேட்காமலே தாமாகவே முன் வந்து இதை செய்த திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என்னை கலங்கச் செய்து விட்டார்கள். எழுத்தாளர் பாவண்ணனின் அனுசரனையும்.
என்ன ஒரு வாத்சல்யம்.
அமேசான் கிண்டிலில் என் நூல் “ தூறலாய சாரல்”
லிங்க்


மு.க. நெஞ்சுக்கு நீதியில்

$
0
0

ஏ.கோவிந்தசாமி அண்ணா அமைச்சரவையில் அமைச்சராயிருந்தவர். இவருக்கு ஒரு தனித்துவம் உண்டு. என்னவென்றால் தி.மு.கவின் முதல் எம்.எல்.ஏ.
1957ல் தான் தி.மு.க முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 1952ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் கோவிந்தசாமி. அவர் வேட்பாளராய் இருந்த போது தி.மு.க ஆதரவு தந்தது. இந்த இணக்கம் காரணமாக அவர் எம்.எல்.ஏயாக இருக்கும் போது தி.மு.கவில் இணைந்தார். இவருடைய மகன் ஏ.ஜி.சம்பத். இப்போது விழுப்புரம் பொன்முடியால் கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளராகி விட்டார்?
எஸ்.டி. சோமசுந்தரம் என் மாமனாரின் மிகச்சிறந்த நண்பர். என் மனைவியின் மூத்த சகோதரியின் திருமணத்தில் “ சந்திரனே மாப்பிள்ளை போல இருக்கிறார். அவர் மகளுக்கு திருமணம் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்று பேசினார்.
என் மாமனார் இறந்த பிறகு சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு அதிமுக காரர் ஒருவர் சென்னையில் எஸ்.டி.எஸ்ஸிடம் “ நான் எஸ்.எம்.டி.சந்திரனின் உறவினர். அவருக்கு கஸின்.” என்று சொன்ன போது எஸ்.டி.எஸ். “ சந்திரன் எனக்கு மகன் போல. இறந்துட்டானே.” என்று கண்ணீர் விட்டு அழுது விட்டாராம்.
இங்கே நான் சொல்ல வருவது வேறு.
குங்குமத்தில் நெஞ்சுக்கு நீதி தொடராக வெளியிட்ட போது படித்திருக்கிறேன்.
அதில் இரு அரசியல் நிகழ்வுகள் என்னால் மறக்க இயலாது.
அண்ணா மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான மூன்றாவது மாதம் நடந்த விஷயம்.
என் நினைவில் இருந்து எடுத்து எழுதுகிறேன். நெஞ்சுக்கு நீதி முப்பத்தைந்து வருடம் முன்னால் படித்ததை என் ஞாபகத்தில் இருந்து அந்த சம்பவங்களை சுட்டுகிறேன்.
விவசாய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மரணப்படுக்கையில் இருந்த போது முதல்வர் கருணாநிதியிடம் “ நான் இறந்த பின் என்னுடைய ஜாதியில் ஒருவரை அமைச்சராக்க வேண்டுமே என்று எண்ணி பண்ருட்டி ராமச்சந்திரனை மந்திரியாக்கி விடாதீர்கள்” என்று சொன்னாராம்.
கருணாநிதி சொல்கிறார்.” ஏ.ஜி. மரணப்படுக்கையில் இருக்கும்போது அப்படி வலியுறுத்தி சொல்லியும் கேளாமல் பண்ருட்டியை அமைச்சராக்கினேன். அது என் பெரிய தவறு பின்னால் தெரிந்து கொண்டேன்.”
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது நிகழ்ந்த விறுவிறுப்பான விஷயங்கள் பல.
பொதுவாக அன்று தமிழக பெண்கள் கருணாநிதியை மிகவும் வெறுத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு விலக்கப்பட்ட இரண்டாம் நாள். நான் தெருவில் நடந்து வரும்போது  தண்ணீர் பிடிக்க குழாயடியில் பெண்கள் பத்து பேருக்கும் மேல் கூடியிருந்தனர். ஒரு பெண் சொன்னார் : கருணாநிதி கொலையெல்லாம் செய்வானாமில்ல. பெண்களோட கற்ப கெடுத்து விட்டுருவானாம்..”
அங்கிருந்த பெண்கள் அனைவருமே முகம் சுளித்து அதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்.
எம்.ஜி.ஆர் நல்லவரு. கருணாநிதி கெட்ட ஆளு.
அன்றைய தமிழக பெண்களின் பொதுப்புத்தி இது.
பின் புத்தி?
அரசியல் மேல் மட்டத்தில் அன்று நடந்த ஒரு எதிர் பாரா திருப்பம் நிறைந்த விஷயம் பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு இரண்டாம் முறையாக வந்திருந்த போது குங்குமத்தில் எழுதியதில் நான் படித்ததில் ஞாபக அடுக்கில் இருந்து இங்கே கீழே.
எஸ்.டி. சோமசுந்தரம் அப்போது பாராளுமன்ற உறுப்பினர். கலைஞரிடம் வந்து எம்.ஜி.ஆர் துரோகம் பற்றி வேதனை தெரிவித்திருக்கிறார். துரோகி எம்.ஜி.ஆருக்கு அ ஆதரவாக மேதை மதியழகன் செயல்படுவதைப்பற்றிய தன் தீவிர கோபத்தையும், கடும் அதிருப்தியையும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மதியழகனை நேரில் போய் பார்த்து நாலு வார்த்தை நறுக்கு தெறித்தாற் போல் கேட்கப்போவதாக எஸ்.டி.எஸ். சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி உடனே,உடனே ‘மதியழகனை சந்திக்க நீங்கள் போகவே வேண்டாம்” என்று தடுத்திருக்கிறார். எஸ்.டி.எஸ் “ நீங்க சும்மா இருங்க. நான் அந்த மனுசனை நேரில் பார்த்து திட்டாமல் இருக்க முடியாது.” என்றாராம்.
மதியழகனை எஸ்.டி.எஸ் சந்தித்த பின் அந்த விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது. அ.தி.மு.வில் சேர்ந்த முதல் எம்.பி எஸ்.டி.சோம சுந்தரம் என்று மறு நாள் பத்திரிக்கைகளில் செய்தி.
கருணாநிதி இந்த இடத்தில் மதியழகனின் ஆளுமை பற்றி சொல்வது சுவையானது.
மேதை மதியழகனிடம் ஒரு அற்புதமான திறமை உண்டு. அது கான்வர்சேசனில் எவரையும் கன்வின்ஸ் செய்து விடுவார். அவர் சொல்வதை பிறர் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய உரையாடலின் வீச்சு இருக்கும். அவர் பேசுவதை மறுத்து பேசவே முடியாது என்று கழகத்தலைவர் குறிப்பிடுகிறார்.
இவர் சொன்னதை மீறி மதியழகனை சந்தித்த சோமுவை இப்படி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த முதல் பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டார் அந்த மேதை.



Viewing all 1852 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>