Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1858 articles
Browse latest View live

திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது

$
0
0
திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது.
இதை கொண்டாட கஃபே சிசிலியாவில் நேற்று கேக் வெட்டிய போது கேக்கின் முதல் துண்டை எனக்கு ஊட்டி விட்டு என் காலை தொட்டு வணங்கினார் சுதா.
முந்தைய தினம் நான் அவரிடம் சொல்லியிருந்தேன்.
“ நீ உயர்ந்த சிறப்பை உன் வாழ்வில் காண்பாய்” .
நேற்று ரெஸ்ட்ரெண்ட்டில் ஷூட்டிங் லஞ்ச் ப்ரேக்கில் “சார், நேற்று தான் நீங்கள் ஆசி வழங்கினீர்கள். இன்று எனக்கு கலைமாமணி விருது கிடைத்திருக்கிறது!” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
அவருடன் நானும் ஒரு feature filmல் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
சகோதரி, உன்னுடைய ஏற்றத்தில் இந்த சமூகத்தின் மேன்மை இருக்கிறதம்மா.

(புகைப்படம் சுதா எடுத்த செல்ஃபி.)

https://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_27.html


சீதாலட்சுமி

$
0
0


எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது. 
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
 “ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”


எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார். 'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'

உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.

அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம். 
தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார்.

அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
உயர்ந்த மனிதனில் சிவகுமாரிடம் சிடுமூஞ்சியை காட்டினாலும் அன்பை பாந்தமாக வெளிப்படுத்துவார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை நடிப்பில் இயல்பாக காட்டியவர்.


இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.

சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.

இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட்,  தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.

இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் ஒரு கலைப்பாரம்பரிய தொடர்ச்சியை நிறுவியவர் சீதாலட்சுமி.

…………………..

ராகுலம்

$
0
0

ஸ்டெல்லா மாரிஸ்
Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.
சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்
“ ராகுல் “ என்று இழுத்து மீண்டும் கேள்வியை தொடர்ந்தது அற்புதம்.
எந்த சினிமாவிலும் காண முடியாத நேர்த்தியான காட்சி. ஆஹா.

நாகர்கோவில்
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.
என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.
'Mea culpa,Mea culpa,mea maxima culpa'
(மேயா குல்பா, மேயா குல்பா, மேயா மாக்சிமா குல்பா)
என் பாவமே என் பாவமே, என் பெரும்பாவமே
380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்?
சிந்தனை தெளிவடைந்தேன்.


நிர்பய துச்சாதனம்

$
0
0


காலத்தின் பெருந்துயர நிகழ்வுகள் வெளிச்சப்படுத்தப்படும்போது நொறுங்கிப்போன இதயம் எந்த நிவாரண மருந்துமின்றி தான் ஸ்தம்பித்துப்போய் விடுகிறது. சமூக பொது புத்தி வலைத்தளம், பத்திரிக்கை, தொலைக்காட்சி பொங்கி சீறும் போது ஒதுக்கமாக இருப்பது அறம் சம்பந்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் தர்ம அடி கொடுக்கலாம்.

இந்த சமீபத்திய பொள்ளாச்சி நிகழ்வில் புகார் கொடுத்த வீராங்கனை பற்றிய பெயர், குடும்ப விவரங்கள் காவல் துறையால் பகீரங்கப்படுத்தப்பட்டதென்பதும், அரசாணையிலும் கூட அச்சிடப்பட்டிருப்பதும் தான் உச்ச பட்ச துச்சாதனம்.
கொடுமையான அந்த அரக்கச்செயல்களையும் விட கொடூரமான துச்சாதனம் இது தான். நிர்பய துச்சாதனம்.
இந்த துச்சாதனத்திற்கு என்ன தண்டனை? இதற்கு பிராயச்சித்தம் வேண்டாமா?

டெல்லி நிர்பயா பிரச்னை தமிழக காவல் துறைக்கும், அரசாணை வெளியிட்டிருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. பொது அறிவு இல்லையா? இது அடிப்படை அறிவு கூட இல்லையா?

அந்தப் பெண் பற்றிய விவரங்கள் பகீரங்கப்படுத்தப்பட்டதே அவளுக்கு மட்டுமல்லாமல் மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்குமான தெளிவான மிரட்டல். புகார் கொடுத்த பெண் உடனே சல்லித்தனத்தால் பாதிக்கப்பட்ட செய்தியையும் கவனிக்கிறோம். காவல் துறையில் புகார் கொடுப்பவர்கள் காயப்படுத்தப்படுவார்கள் என்பதும் அயோக்கியத்தனம்.

காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஏன் இப்படி அந்த பெண்ணின் பெயர், குடும்ப விபரங்களை வெளியிட்டீர்கள் என்ற கேள்விக்கு அவரது ஒற்றை வரி பதில்: ’தவறு தான்’

ம்ஹும் ..ச்சே…
………….

Acted as a Minister

$
0
0


In a short film shooting three months back in SRM Engineering college. 
I acted as a minister.

Singapore Elangovan’s play “GODSE”

$
0
0

சிங்கப்பூர் இளங்கோவன். நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.

இவருடைய நாடகங்கள் சர்ச்சைக்குரியவை. பல நாடகங்கள் சிங்கப்பூர் அரசால் தடை செய்யப்பட்டவை. அவருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது.

இவருடைய”GODSE”ஆங்கில நாடகம் 2015ம் ஆண்டு படிக்க ந.முத்துசாமி கொடுத்தார். டவுன் லோட் செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட பிரதி.
படித்து விட்டு அதை கூத்துப்பட்டறை முழுநேர நடிகர்களுக்கு வாசித்துச்சொல்லி விளக்கும்படி என்னை பணித்தார்.அந்த கடமையை நவம்பர் 23,24,25 தேதிகளில் அப்போது நிறைவேற்றினேன். முத்துசாமியும் முழு நிகழ்விலும் கலந்து கொண்டு உடனிருந்தார்.

சிங்கப்பூர் இளங்கோவனின் கோட்சே நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கூத்துப்பட்டறையால் மேடையேற்றப்பட வேண்டும் என்று முத்துசாமி சார் விரும்பினார். நடக்கவில்லை.
நாடகம் மிகவும் வீரியம் வாய்ந்ததாய் இருந்தது.
இரண்டே கதாபாத்திரங்கள். கோட்சே, காந்தியார். இருவருமே உண்மையையே தேடியவர்கள்.
மரணத்திற்கு பின் இருவரும் திரிசங்கு சொர்க்கத்தில் சந்திக்கிறார்கள்.
காந்தியை சுட்ட துப்பாக்கி ஒரு குண்டு மீதமான நிலையில் அவர்கள் முன்.
திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபட அவர்கள் இருவருமே ரஷ்யன் ரௌலட் கேம் விளையாடும்படியான நிர்ப்பந்தம்.
நாடகத்தில் கோட்சே தான் பெரும்பாலும் protagonist. காந்தியாருடன் தர்க்கம் செய்யும் கோட்சே.
Godse’s Memoryscape.சரித்திர தகவல்களை புரட்டிப்போடும் வசனங்கள்.
எம்.ஓ.மத்தாய், குஷ்வந்த் சிங் போன்றோர் மவுண்ட்பேட்டன் மனைவிக்கும், நேருவுக்கும் இருந்த Extra- marital relationship பற்றி எழுதியிருக்கிறார்கள்.
இன்று இந்த விஷயம் எல்லோரும் கண் விரிய பேசுகிற cliché.
இளங்கோவன் இந்த கோட்சே நாடகத்தில் நேருவுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குமே ஹோமோசெக்சுவல் உறவு இருந்ததாக எழுதியிருக்கிறார்.
காந்தி முதிய வயதில் இளம்பெண்களுடன் படுத்துறங்கின விஷயம் மிகவும் விவாதிக்கப்பட்ட விஷயம்.
காந்தி கேட்கிறார். ’நானாவது இளம்பெண்களோடு படுத்தேன். இப்படி ஆம்பளையோடு படுத்திருக்கிறார்களே.’
According to Justice Gopal Das Khosla, one of Godse’s judges, who did play a role in convicting him: “… the audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. I have, however, no doubt that had the audience on that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of ‘not guilty’ by an overwhelming majority.”
ஒரு விஷயம் கவனிக்கலாம்.
Godseஎன்ற அவருடைய பெயரின் துவக்கத்திலேயே கடவுள் துருத்திக்கொண்டிருக்கிறார். அவரை Godsendஎன நம்புகிற காவி அரசியலும் இன்று எட்டுக்கண்ணும் விட்டெரிகிறது.

Singapore Elangovan's comment in Facebook

$
0
0

Thank you Rajanayahem. I have always followed your enlightening blog articles. It is my great pleasure to hear from you about GODSE.


GODSE play-text is available in my latest collection of plays ALAMAK, published by Zerodegree Publishing in Chennai. Available online in Zerodegree, Panuval and other websites.
I gave the text as pdf to Muthusamy when he was in Singapore at his son Ravi's house. That was the last meeting and hearty conversations.

Had plans to meet him in Chennai again but he has passed on. A Koothu-p-Pattarai without him is like visiting an empty palace. Our relationship lasted from 1989, when I brought him down to stage NAARKAALIKKARAR to change the Singapore Tamil theatre scene. It further continued with his participation with Purisai Kannappath Thambiran group's performance in 1990, and KPP's doublebill - England & Macbett in 1998 and Singapore Writers Week 1991.
I did not know that he had wanted to really stage GODSE against all the odds in the Tamilnadu political sphere. If he had informed me then, I would have translated the play for KPP and could have met him again in Chennai.
Once again, thank you so much for bringing the memories.
Elangovan

மாஸ்டர் ராஜ்குமார்

$
0
0

ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த அந்த படத்திற்காக நூறு குழந்தைகளை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களில் மாஸ்டர் ராஜ்குமாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்தப்படம் ’ராமு’. எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

எஸ்.வி.சுப்பையா குழந்தை ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
சொல்லும் பிரபல வசனம் “ தெய்வத்துக்கு ஆயிரம் கை. அதில் ஒரு கை கூட என் கண்ணீரை துடைத்து விட்டதில்லை.”
ராமுவாக டைட்டில் ரோலில் நடித்த ராஜ்குமார் ‘எனக்கு சாகத்தெரியலயே அப்பா’ என்று மணலில் எழுதிக்காட்டும் போது தியேட்டரில் கண் கலங்கி கண்ணீர் விட்டவர்கள் அனேகர்.

ஜனாதிபதி ஜாகிர் உசேன் கையால் அகில இந்தியாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசிய விருது பெற்றார். ராமுவில் நடிக்கும்போது சிறுவனுக்கு எட்டு வயது.
தமிழில் நூறு நாள் ஓடிய படம். தமிழில் ஜெமினி கணேசன் கதாநாயகன். தெலுங்கில் என்.டி.ராமராவ். ராமுவாக தெலுங்கிலும் மாஸ்டர் ராஜ்குமார் தான் நடித்தார். ஆந்திராவில் முப்பத்தைந்து வாரங்கள் ஓடியது. தெலுங்கில் கோவர்த்தனம் இசையமைத்தார்.
எம்.ஜி.ஆருடன் பெற்றால் தான் பிள்ளையா? ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ பாடலில் ஆட்டம் போட்ட சிறுவன்.
ராஜ்குமார் ’சபாஷ் தம்பி’ படத்திலும் டைட்டில் ரோல் செய்தார்.
பாலிஷ் பூட் பாலிஷ் பாடல்.
ஜெய்சங்கர் இவரை புகழ்ந்து பாடுவது “ சபாஷ் தம்பி, உன் செய்கையை போற்றுகிறேன்.நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றிடுவேன்.”
இருமலர்களில் நாகேஷின் மகனாக.
தெய்வமகன் படத்தில் ஜுனியர் சிவாஜியாக கலக்கியவர்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பால்யத்தில் ராஜ்குமாரை வைத்து சில மறக்கமுடியாத நினைவுகள் உண்டு.
அப்பா முதல் முறையாக டேப் ரிக்கார்டர் வாங்கி வந்திருந்த போது அதில் நான் பாடிய பாடல் “பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு, பாட்டு சொல்லி தூங்கச்செய்வேன் ஆரிராரோ,” ஒரு பாடலில் என் குரல் முதல் முறையாக கேட்ட த்ரில்.
பள்ளியில் நான் குட்டி பத்மினியின் பாடல்கள் பாடியிருக்கிறேன். “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,”
“கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே.” பாடிய போது அரங்கமே கை தட்டி அதிர்ந்திருக்கிறது.
பாட்டுப்போட்டியில் நான் பரிசு வாங்கிய பாடல் எம்.ஜி.ஆருடன் ராஜ்குமார் ஆடிய “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி”
சென்னைக்கு சிறுவனாக நான் முதல் முறை வந்திருந்த போது ஒரு வீட்டில் எனக்கு விருந்து. அங்கே இருந்த கிராம போன் ரிக்கார்ட் ப்ளேயரில் நான் கேட்ட பாடல் “ பாலீஷ், பூட் பாலீஷ்”

சாயல் என்பது ஒவ்வொருவர் கண்ணுக்கும் எப்போதும் ஒவ்வொரு மாதிரி தெரியும். பால்யத்தில் என் சாயலில் ராமு முகம் தெரிகிறது என்று சொன்னவர்கள் உண்டு.
அதிகம் பேசாத என் மூத்த மகன் கீர்த்தியின் இயல்பில் ராமுவையே நான் பார்த்திருக்கிறேன்.
ராஜ்குமார் அப்போது நடித்த பிற படங்கள் - ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்த நாலும் தெரிந்தவன்,
ரவிச்சந்திரன், விஜயகுமாரி ( அபூர்வமான ஜோடி) இணைந்த “செல்வியின் செல்வன்”.
ஏ.வி.எம் ராஜன் நடித்த ’பிரார்த்தனை’ தான் ராஜ்குமார் நடித்த கடைசிப்படம்.
காலம் காட்டும் விசித்திரம். அதன் பின் மாஸ்டர் ராஜ்குமார் இசைக்கருவி வாசிக்கும் கலைஞராக மாறி விட்டார்.
இவருடைய அப்பா ஹனுமந்தாச்சார் ஒரு இசைக்கலைஞர். சிந்தஸைசர் எனப்படும் கீ போர்ட் வாசிப்பவர்.
கோவர்த்தனம் மூலமாக ரீரிக்கார்டிங்கில் வாசிக்க இளைஞன் ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைத்த போது நல்ல எக்ஸ்போசர். அதன் பின் திரையுலக இசைக்கலைஞராக பரிமாணமே மாறியிருக்கிறது.
Life is a walking shadow – Shakespeare in Macbeth.
அக்கார்டியன் பிரமாதமாக வாசிப்பார்.
அந்த நேர நெருக்கடி பற்றியும் ராஜ்குமார் வெள்ளந்தியாக சொல்கிறார். “அப்பாவுக்கு வேலையில்லை. நான் எனக்கு வந்த இசைத்துறை வாய்ப்புகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய சூழ் நிலை. மீண்டும் நடிக்க போக பயம். அரசனை நம்பி புருஷனை கை விட்டு விடக்கூடாதே”


விட்டோரியா டெசிக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பின்னாளில் பள்ளிக்கூட வாத்தியாராகிப்போனார் என்பது நினைவுக்கு வருகிறது.

விந்தை என்னவென்றால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அதே ஏ.வி.எம். ஸ்டுடியோ விஜயா வாஹினி, பிரசாத் ஸ்டுடியோவில் தான் ராஜ்குமாரின் பிற்கால வாழ்க்கையும் என்றாகிப்போனது என்பது தான்.
எம்.எஸ்.வி, கே.வி. மஹாதேவன் பாடல்களில் அக்கார்டியன் வாசித்திருக்கிறார்.
இளையராஜாவிடம் 1977 முதல் 1990 வரை பாடல் பதிவில் அக்கார்டியன் இசைக்கலைஞர் ராஜ்குமார் பணி புரிந்திருக்கிறார்.
அன்று ஆரம்பித்த திரை இசைக்கலைஞர் பணி ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காக “மாற்றான்” படத்தில் கூட அக்கார்டியன் வாசித்தார்.
தேவி பிரசாத் பாடல் “ என்றென்றும் புன்னகை”
’பத்மினியும் பண்ணையாரும்’ படத்தில் ’உனக்காக, உனக்காக’ பாடல்.
ராஜ்குமாருக்கு இரண்டு மகன்கள்.
சமீபத்தில் சென்ற அக்டோபர் மாதம் அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகப்பெரிய மீளமுடியாத துயரம். மூத்த மகனின் திடீர் மறைவு.
புத்திரசோகம் தான் எத்தகைய கொடியது.
இளைய மகன் பவன் குமார் தான் இன்று அவர்களுக்கு ஆறுதல்.
ராஜ்குமார் முழுமையாக நொறுங்கிப்போய் இருக்கும் நிலையில் தான் அவரை நான் நேரில் சந்திக்க வாய்த்திருக்கிறது.

மாஸ்டர் பிரபாகர்

$
0
0

தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில் நடித்தார். படம் முடிக்கப்படவுமில்லை. அதனால் ரிலீஸ் ஆகவுமில்லை. இந்த தேவாலயம் தான் மாஸ்டர் பிரபாகருக்கும் முதல் படம்.
All great performances have a ridiculous beginning.
மதுரை சௌராஷ்ட்ரா குடும்பம். பதினொரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவர்.
கே.எஸ்.ஜி இயக்கி பத்மினி நடித்த ’சித்தி’ தான் பிரபாகருக்கு முதல் படம். ’சித்தி கொடுமை பண்ணுவா’ என்று சுந்தரி பாய் பயமுறுத்தியதை நம்பி சித்தி பத்மினியை பார்த்ததும் நடுங்கும் குழந்தைகளில் பிரபாகரும் ஒருவர்.
குழந்தை நட்சத்திரங்களில் படு பிசியானவர் பிரபாகர். பால்ய காலம் முழுக்க சினிமாவுலகம் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.
மறக்கமுடியுமா? மறக்க முடியாத காட்சிகள். காகித ஓடம், கடலலை மேலே மறக்க முடியாத பாடல்.
திருவருட்செல்வரில் திருஞானசம்பந்தர் பாத்திரம் பிரமாதமானது.
மாஸ்டர் பிரபாகரை பயன்படுத்திய முக்கிய இயக்குனர்கள் என்றால் ஏ.பி.நாகராஜனும், கே.பாலச்சந்தரும் தான்.
ஸ்டைல் காட்டி நடித்த சுட்டிப்பையன் மாஸ்டர் பிரபாகர்.
பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.
இருகோடுகள் படத்தில் புத்திசாலி சுட்டியாக துறுதுறு தனத்துடன்.
’புன்னகை மன்னன், பூவிழி கண்ணன் பாட்டின்’ பல்லவி ஆரம்பிக்கு முன் பாலகிருஷ்ணனை வா வா என்று வரவேற்று அழைத்து வரும் அழகு.
தேவரின் ’நேர் வழி’யில் கௌபாய் குதிரை சவாரி, சிங்கத்தின் மீதே உட்கார்ந்த காட்சிகள்.

’வா ராஜா வா’ இன்று உள்ள குழந்தைகளுக்கு கூட பிடித்த படம். மஹாபலிபுரம் பார்க்க போகிறவர்கள் இந்த வா ராஜா வா நினைவில் மூழ்காமல் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக பிரபாகரை நடிக்க வைத்தார் ஏ.பி.நாகராஜன்.
’ராமன் எத்தனை ராமனடி’யில் சிவாஜியை “டேய் சாப்பாட்டு ராமா” என்று கூப்பிடும் சிறுவன். அன்று இது கண்டு பிரமிக்காதவர்கள் கிடையாது.
’எங்க மாமா’ குழந்தைகள் செல்லக்கிளிகளில் ஒன்றாக.
திருமலை தென்குமரியிலும் பிரபாகர் உண்டு.
இளைஞனாக மலையாளப்படம் ’ஈநாடு’.
இன்று சொன்னால் ஆச்சரியம். மொத்தம் 185 படங்கள்.
ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ரோல் மாடலாக மாஸ்டர் பிரபாகரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவருடைய தங்கை சுமதி இன்று கனடாவில் இருக்கிறார்.
இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் மாஸ்டர் ராஜ்குமார் (ராமு) வீட்டிற்கடுத்த க்ரீன் ஹோமில் பெரிய ஜெராக்ஸ் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

Sad Sorrows

$
0
0
Proud people breed sad sorrows not only for themselves.
வறுமையும் ஏழ்மையும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டங்கள் பல.
கவித இல்லீங்க்க்கங்க்க்க்கோ..
துன்பக்கத, துலாபாரம்..
சொந்தக் கத, சோகக்கத
’ஏழை எளியவர்களுக்கு
கொடுத்து வைக்காத
பல விஷயங்களில் ஒன்று
ஐ.ட்டி ரெய்டு ’

...

டி.விய ஆன் பண்ணாலே மொட்டயன் ரொம்ப கனிவா 
உழச்ச பணத்துக்கு கவனமா நகை வாங்க சொல்லி அனத்துறான்.
போடா.. ஒழச்சா சாப்பாட்டுக்கு, வீட்டு வாடகைக்கு தான் பட்ஜெட் சரியாருக்கு. வயித்தெரிச்சல். 
நகை சீட்டு கட்ட பணம் எங்கடா இருக்கு?
Proud people breed sad sorrows.

இயக்குநர் மகேந்திரன்

$
0
0

1989ம் வருடம். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் பல காலமாக இருந்த மகேந்திரன் அதற்கான முயற்சியில் தி.ஜாவின் மூத்த மகன் சாகேதராமனை சந்திக்க சென்னை வரும்படி சொன்னார். 

சாகேதராமன் இது குறித்து மணிக்கொடி சிட்டியிடம் ஆலோசனை கேட்டார். தன்னுடன் மகேந்திரனை சந்திக்க சிட்டி உடன் வரமுடியுமா? என்று கேட்டார். நாவலை படமெடுக்க மகேந்திரனிடம் என்ன தொகை கேட்கலாம் என்று அவருக்கு குழப்பம் இருந்திருக்கிறது. சிட்டி “ monetary groundsல் நீ பேச வேண்டியிருப்பதால் நான் வர விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார். இதை அப்போது சிட்டி என்னிடம் தெரிவித்தார்.
சாகேதராமன் டெல்லியில் இருந்து சென்னை வந்து மகேந்திரனை சந்தித்தார். முப்பதாயிரம் தொகை நாவலுக்காக தரப்பட்டிருக்கிறது.
இதையும் சிட்டி என்னிடம் சொன்னார்.

அப்போது மகேந்திரனுக்கு விநியோகஸ்தர்களிடம், ஃபைனான்சியர்களிடம், தயாரிப்பாளர்களிடம் பெரும் மதிப்பு ஏதும் இருந்திருக்கவில்லை. அவரால் மோகமுள் படத்தை இயக்கவே சூழல் வாய்க்காமல் போய் விட்டது.
அதன் பின்னர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் மோகமுள் வெளி வந்த போது அந்தப் படத்தை மகேந்திரன் பார்க்கவில்லை.
அவருடைய மன அவசம். “ நான் திரைப்படமாக உருவாக்கியிருக்க ஏங்கியிருந்த ஒரு நாவல் தி.ஜானகிராமனின் மோகமுள். அதை எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்று எவ்வளவு திட்டம் தீட்டியிருப்பேன். அந்த காவியத்தை இன்னொருவர் இயக்கத்தில் பார்க்க என் மனம் ஒப்பவில்லை.”
அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன்.
அவர் ஒருமுறை சொன்ன ஒரு ஆங்கில வாக்கியம். அவரே யோசித்து சொன்னாரா? ஒரு மேற்கோளா? தெரியவில்லை.
“ Life is like a snooker game. You hit one. That ball hits another. Ultimately some other ball gets into the pocket.”
பாரதிராஜாவுக்கும் பாக்யராஜுக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் இருந்த கமெர்சியல் வேல்யு மகேந்திரனுக்கு இருந்ததில்லை. கை கொடுக்கும் கையாக ரஜினி தந்த வாய்ப்பும் சோபிக்கவில்லை.

இவர் வசனம் எழுதிய வெற்றிகரமான நாடகம் ’தங்கப்பதக்கம்’ திரைப்படமானது.
மகேந்திரன் ஒரு ஜர்னலிஸ்ட். சோவின் துக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கிறார்.
 ரொம்ப காலம் கழித்து கே.பாலச்சந்தர் “ உனக்குப்பிடித்த இயக்குநர்?” கேள்விக்கு
“மகேந்திரன்” என்று ரஜினி உடனே, உடனே சொன்னதை எல்லோரும் பார்க்க முடிந்தது. பாலச்சந்தர் “ பாத்தியா? என் பேர சொல்ல மாட்டேங்கிற.”
ரஜினி இன்னும்  கூட  கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கலாமே. IFS and BUTS.
ரொம்ப வருடங்களுக்கு முன் ’விண் நாயகன்’ என்ற பத்திரிக்கையில் அனைத்து ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணன் என்பவர் ‘ரஜினிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவருடைய எல்லா நாவல்களையும் ரஜினி படித்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை தானா?

கமலும் மகேந்திரனும் ஏன் இணையவில்லை. 
கமலின் நிராகரிப்பா? மகேந்திரனின் புறக்கணிப்பா? அல்லது இணைந்து செயலாற்ற நினைத்தும் ஈடேறவில்லையா?
மகேந்திரனின் உறவினர் தான் ராஜேஷ். தன்னை மகேந்திரன் நிராகரித்து புறக்கணிப்பதாக வருத்தப்படாமல் இருந்திருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து ’மெட்டி’யில் தான் கொடுத்தார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் எத்தனை முறை சலிக்காமல் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று கணக்கெடுக்க முடியவில்லை.

Ongoing

$
0
0
வடிவேலு தீர்க்கதரிசனம்
எண்ணமும் செயலும் நல்லாயிருந்தா கன்னம் ‘பன்னு’ மாதிரியாகி தேஜஸாயிடும்டா
....

Vadivelu Black humour

வர வர உங்க வேர்டல்லாம் ரொம்ப பேடா இருக்குடா

.....


அந்தமானை பாருங்கள் அழகு
கூரையேறி கோழி பிடிக்கறத விட வானமேறி வைகுண்டம் போறது தான் சௌகரியம்
ரொம்ப முக்கியம்



கமலும் உமியும்

$
0
0

கமல் தன் கட்சி திரினாமுல் காங்கிரஸோட கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்த விஷயம்..
Strange!
பலருக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம். அப்படியா என்று கேட்பவர்களும் நிறைய.

மம்தா பானர்ஜி கூந்தல விரிச்சிப் போட்டு,சிலம்பை தூக்கிப் போட்டு  உடைச்சி,
ஒத்த முலையை பிச்சி வீசி 
"புரபசர் அம்பிகேஷ் மகாபத்ரா ஈமெயிலில் சர்குலேட் செய்த கார்ட்டூன்  எனக்கு விடப்பட்ட ஒரு கொலை மிரட்டல்"ன்னு
 ஒப்பாரி வச்சத இன்னிக்கும் மறக்க முடியுமா?
தொகுதி உடன்பாடுக்கு வழியே இல்லாத வினோத கூட்டணி. வாக்கு பொறுக்கவாவது வழியுண்டா?
கமல் தனக்குன்னு ஒரு பாணி வச்சு முத்திரைய குத்தியிருக்கார்?
எதற்கு கூட்டணி? என்ன பயன்பாடு?
’நானும் மத்தவங்க மாதிரி ஒரு கூட்டணி போட்டிருக்கேன் பாருங்க. நானும் தான் நண்டு வலையில இருக்கேன்.’
தே.மு.தி.க வோட கூட்டணி சேரத்தயார் என்று சொன்னவர் தானே. 
டி.டி.வி. தினகரனோடு கூட சேர நினைத்தார் என்றெல்லாம் அரசல் புரசலாக காதில் விழுந்தது. அதுவும் உண்மையென்றால்
Yoo too Kamal?
அந்த மமதா அம்மாவாவது ‘போப்பா, போ. ஒன் துருத்திய நீ ஊது. என் துருத்திய நான் ஊதிக்கிறேன்.போ’ன்னு சொல்லிச்சான்னா, அது இல்ல.
அந்தமானுக்கு போய் திரினாமுல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் உற்சாகமாக கூறி விட்டார்.
ஒரு கேள்வி. மமதா பானர்ஜி சென்னப்பட்டணத்திற்கு ஒரு நாள் மக்கள் நீதி மய்யத்திற்காக பிரச்சாரம் செய்ய வருவாரா? ’வருவார், பிரச்சாரம் என் கட்சிக்காக செய்வார்’ என்று கமல் கூற முடிந்தால் சந்தோஷம். இல்லையென்றால் கூட்டணி ஒரு வான வேடிக்கை stunt தான்.
மமதா : ”நீ அவல் கொண்டு வா. நான் உமி தர்றேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்.”
கமல் வேட்பாளராக தானே களத்தில் இறங்கியிருக்க வேண்டும். வெற்றி இல்லாமல் போய் விட்டாலும் வாக்கு சதவீதம் கட்சிக்கு இதனால் அதிகரிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
Politicians are shameless with their deeds, they exploit each other and the people in their own way.

Don't get their goat

$
0
0

பாண்டிச்சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் நான்கைந்து பேராக பேசிக்கொண்டிருந்த வேளையில்
ஒரு சனாதனி துவேசத்துடன் சுள்ளென்று முகம் சுண்டி கொப்பளித்தார் “ அவன் மாட்டுக்கறி சாப்பிடுறவன். மாட்டுக்கறி சாப்பிட்டா மாட்டுப்புத்தி தானே இருக்கும். மனுஷன் புத்திய மாட்டுக்கறி சாப்பிடறவன் கிட்ட எப்படி எதிர் பார்க்க முடியும்? “
நான் அவரிடம் கேட்டேன்: மாட்டு பால், மாட்டு தயிர், மாட்டு நெய், மாட்டு மோர், இதெல்லாம் சாப்பிடறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வராதா?. கோமியம்னு மாட்டு மூத்திரத்த கொண்டாடி கொடமொடக்கிறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வரவே வராதா?”
Why do you get their goat?



பாப்பா தெய்வ பாப்பா

$
0
0

கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சகஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம்.
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில்
ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.
பச்சை குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு கூட செய்யும் தொந்தரவுகள் பற்றி.




Funny and Wacky I.S.Johar

$
0
0

ஜோஹர் இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் கூட சின்ன ரோலில் தலை காட்டியிருக்கிறார். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் ஜோஹர் உண்டு.
கடைசி காலங்களில் ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பிரபலம்.
His life was funny, weird and wacky.

இந்தர் செய்ன் ஜோஹர். தேவையில்லாமல் கரண் ஜோஹர் அப்பாவா இவர் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். அப்படியெல்லாம் கிடையாது.
தேவ் ஆனந்த் ஜானி மேரா நாம் தமிழில் ராஜா வாக சிவாஜி நடித்து ரீமேக் செய்யப்பட்டது. அதில் இந்தியில் ஜோஹர் செய்த மூன்று சகோதரர்கள் ரோலை தமிழில் சந்திரபாபு செய்திருந்தார்.
ஜோஹர் பெரும்பாலும் இந்தி படங்களில் ஜோக்கர் தான்.
பாகிஸ்தானியான ஜோஹர் லாகூரில் இருக்கும்போதே ரமாவை மணந்து கொண்டு மும்பைக்கு இருவரும் வந்தவர்கள். சினிமாவுக்காக தான்.
குஷ்வந்த் சிங்கிற்கு லாகூரிலேயே அறிமுகமானவர்கள்.
ரமாவுக்கு ஜோஹர் வாழ்வு சலித்து, விவாகரத்து செய்து கொண்டு ஒரு உறவினரை திருமணம் செய்து கொண்டு அவரையும் ஒதுக்கி விட்டு மீண்டும் ஜோஹருடன் இணையாமல் தொடர்ந்து சந்தித்துக்கொண்டதுண்டு.
குஷ்வந்த் சிங் அப்போது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஆசிரியராக இருந்த நேரம்.

ரமா நடத்திக்கொண்டிருந்த ஹெல்த் க்ளப்புக்கு குஷ்வந்த்சிங் போவார். அங்கிருந்து ஜோஹர் வீட்டுக்கு ரமாவுடன் செல்வார். குஷ்வந்த்சிங்குக்காக ஸ்காட்ச், மூவருக்கும் சாப்பிடுவதற்காக சைனிஷ் வகை உணவு வாங்கிக்கொண்டு ஜோஹர் வர வேண்டியிருக்கும். ஜோஹர் மனைவி ரமா அப்போது மனைவியல்ல. இரண்டாவது கணவரும் சலித்து வெறுத்திருந்த நிலை. ஒரு பெண் நாய் ஜோஹருடைய கம்பானியன் அப்போது. செல்ல நாய் பீனோ. அவருடைய மகள் போல.
ஜோஹர் தான் எழுதிய சுயசரிதை ஒன்றை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தொடராக வெளியிட முடியுமா? என்று கேட்டு குஷ்வந்த்சிங்கிடம் கொடுத்திருக்கிறார்.
ரொம்ப வேடிக்கையான சுயசரிதை. முதலாவதாக அதில் முதல் மனைவி ரமா பற்றி எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை.
12 வயதில் அவருக்கு செக்ஸ் அனுபவம் அவருடைய அத்தை முறையுள்ள ஒரு அம்மணியுடன். அத்தை இவரை குளிப்பாட்டி விட்ட போது சக்கரை வெடைத்து விரைத்து அதை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என்ற வழி முறையை சொல்லித் தந்திருக்கிறாள்.
அந்த சுய சரிதையில் ஜோஹர் சொல்லும் மற்றொரு விஷயம் – வயதில் மூத்த பையன்கள் இவரை குண்டியடித்ததைப் பற்றி. குண்டியடிக்கப்பட்டது மிகப்பெரிய சுகானுபவமாய் ஜோஹருக்கு இருந்திருக்கிறது.
ஒரு பெண்ணோடு கொண்ட உடல் உறவு. அதன் பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவள் தங்கையை புணர்ந்தது. அதோடு இந்த சகோதரிகளின் தாயார் விருப்பப்பட்டு அம்மணமாய் இவருடைய படுக்கைக்கு வந்து விரக தாபத்தை வெளிப்படுத்தி பிச்சை கேட்ட போது அந்த அம்மணிக்கும் பரோபகாரமாக நெம்புகோலை விளக்கிய நிர்ப்பந்த நிகழ்வு.
இப்படி..இப்படி..
குஷ்வந்த்சிங்கிற்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. ஒரு பத்திரிக்கையாசிரியராக அவர் இதை தொடராக வெளியிட்டால் பத்திரிக்கை உரிமையாளர்களின் கோபாக்னி எத்தகையதாய் இருக்க நேரும் என்று அவர் உணர்ந்ததால் ஜோஹரிடம் “ம்ஹும்..நான் மாட்டேன்..போ..” என்று தலையை மறுதலிக்கும் விதமாக ஆட்டியிருக்கிறார்.
“ச்சீ பச்சை துரோகி.. நீ ஒரு கோழை” என்று ஜோஹர் பொங்கியிருக்கிறார்.
இந்தி நடிகர் கபீர் பேடியும், அவருடைய மனைவி ஒடிஸ்ஸி நடனக்கலைஞர் ப்ரோதிமாவும் கலாச்சார மீறலுக்கு பெயர் போனவர்கள்.
ப்ரோதிமா பேடி ஜூஹு பீச்சில் நிர்வாணமாக ஓடுவார்.
”என் மனைவி ப்ரோதிமா ஒரு விபச்சாரி” என்று பகீரங்கமாக கபீர் பேடி பெருமைப்படுவார்.
பூஜா பேடியின் பெற்றோர்.
கபீர் பேடியை ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரின் ஆக்டோபஸ்ஸியில் பார்க்கலாம்.
கபீர் பேடி, ப்ரோதிமா விவாகரத்து பெற்றார்கள்.
ஒரு நாள் ஐ.எஸ்.ஜோஹரிடமிருந்து உடனே தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி குஷ்வந்திற்கு போன்.

ப்ரோதிமா பேடியுடன் ஜோஹர். வீட்டில் நிறைய பத்திரிக்கையாளர்கள். தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்.
ப்ரோதிமா பேடியுடன் விரைவில் திருமணம். இருவருக்கும் அன்று நிச்சயதார்த்தம். ஐ.எஸ்.ஜோஹரை விட 28 வயது இளையவர் ப்ரோதிமா.
மறு நாள் பத்திரிக்கைகளின் அலறல் எப்படியிருந்திருக்கும்?
ஏன் ஜோஹர் உறவு என்பது பற்றி அப்போது ப்ரோதிமா சொன்ன வார்த்தைகள் “ It is nice to have Johar at my beck and call."
ஆனால் அந்த திருமணம் நடக்கவேயில்லை. Public Stunt.
ஜோஹர் ரமாவை தவிர நடிகை சோனியா சஹானியையும் திருமணம் செய்ததுண்டு.
அறுபத்து நான்கு வயதில் 1984ல் ஜோஹர் இறந்தார்.
ப்ரோதிமா ஆன்மீக வேட்கையில் சன்னியாசியாக மாறிவிட்டதாக சொன்னார். தலையை மொட்டை போட்டுக்கொண்டார். இமய மலை தன்னை அழைப்பதாகவே நம்பினார். ஆறுமுறை இமயமலை பயணம் செய்தவர். கடைசியில் 1998ல் ஐம்பதாவது வயதில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கியவரின் உடல் கிடைக்கவில்லை.
ப்ரோதிமா பேடியை விவாகரத்து செய்த பின் கபீர் பேடி பரபரப்பான நடிகை பர்வீன் பாபியுடன் இருந்தார். அப்புறம் இன்னொரு பெண்.


 மூன்று வருடங்களுக்கு முன் தன் எழுபது வயதில், பர்வீண் துசாஞ்ச் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கபீர் பேடியை விட இவர் 29 வயது இளையவர்.




ஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி

$
0
0

பரபரப்பான செய்தி சேகரிப்பில் மீடியாவும்
விறுவிறுப்பாக தேர்தல் வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருக்கும் போது
ஒரு சேனலில் இருவர் உள்ளம் எம்.ஆர்.ராதா வசனம்

“இந்த நாட்டுல ஒட்டு கேக்கறதும், ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி’

......................
Rajanayahem in Harem pant and T-shirt.
Koothuppattarai Swing



Transformative Acting
Performance of R.P.Rajanayahem
in Elliot's beach SPACES on 31st March
....

ராஜ்குமார் பற்றிய என் பதிவை பார்த்ததன் விளைவு - குங்குமத்தில் அவர் பேட்டி.
”முகநூல் பதிவர் R.P.ராஜநாயஹம் எழுதிய பதிவு ஒன்று தான் மாஸ்டர் ராஜ்குமாரின் நினைவை மீட்டித்தந்தது” என்ற கதிர்வேலனின் குறிப்புடன். 


கட்டக்காலும் குழாக்கார காவாலிகளும்

$
0
0

ஃபுட் பாயிசன் தான் சாவுக்கு காரணம்? 
அழுகுன பன்னிக்கறிய ஒரு பொம்பள புத்தருக்கு கொடுத்துட்டாளாமே. அத சாப்பிட்டுத் தான் செத்தாராம்.
மதுரையில கறுப்பு பன்னிக்கறிய ’கட்டக்கால்’னு கம்மாக்கரையில சொல்வாய்ங்கே. மூல வியாதிக்கு மருந்து இந்த ’கட்டக்கால்’னு பேச்சு உண்டும்.
ஆரப்பாளையம் ரிக்‌ஷாக்காரன் நெட்ட ஆலமரத்தான் முள்ளுக்காட்டில வெளிக்கு போகும்போது பன்னிங்க மேஞ்சிக்கிட்டிருக்கும்.
இவன் குத்த வச்சிக்கிட்டே ஒரு பார்வை பாப்பான். பன்னி வளக்கிற ஆளுங்க பக்கத்தில இல்லன்னு தெரிஞ்சிக்க. எந்திரிச்சி ஒரு ரெண்டடி தள்ளி ஒக்காருவான்.
இவன் பேண்ட பீயில வாய வக்க வரும் சின்ன பன்னிக்குட்டிங்க.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பன்னிக்குட்டிய நாலு காலையும் சேத்துப்பிடிச்சி ஓங்கி தரையில் அடிப்பான். அத கைலிக்குள்ள போட்டு மடித்து கட்டிக்கொண்டு வீட்டுக்கு போயிருவான். அன்னக்கி ஆல வீட்டில கட்டக்கால் கறி கொழம்பு வாசன தூக்கி அடிக்கும்.
மதுர சல்லிங்க அப்பெல்லாம் பேண்ட் போட்ட கல்லூரி மாணவர்களை அடையாளமிட “ குழாகார காவாலிக”னு ஒரு வார்த்தையால சொல்வதுண்டு.
நல்லா ஸ்மார்ட்டா ஒரு கல்லூரி மாணவனை பாத்தா உடனே வாயில் வரும் வார்த்தை “ தாழன் ’சைஸ்’ சரியில்ல”.
வேட்டி கட்டாம, கைலி கட்டாம,
கால் சராய் குழாய் மாதிரி நீளமா மாட்டிக்கொண்டு கையில் ஒரு புத்தகம், நோட் புக்கோட கல்லூரிக்கு போகிறவன் “ குழாகார காவாலி”
”அப்பு டேய், குழாக்கார காவாலிங்க டேஞ்சர் டயாபாலிக்குடா. சூதானமா பழகனும். நம்ம வில்லங்கத்துல மாட்டி விட்டுடுவானக” எச்சரிக்கை மணியடிப்பான் ஆட்டு மூக்கன்.
ஒத்தக்காதன் கையில நூறு ரூபா கொடுத்து ஒரு குழாகார காவாலி சில்லற மாத்திட்டு வரச்சொல்லியிருக்கான். ஆஹா.. அடிச்சிது லாட்டரின்னு கிளம்புன ஒத்தகாதன் ஆசைக்கனவில் மண்.
அடுத்த அரை மணி நேரத்தில் பி6 போலீஸ் ஸ்டேசனில் சந்தேகக் கேஸில் லாக் அப்பில் இருந்தான். “ ஏட்டயா, அடிக்காதீங்க ஏட்டயா” என்று மன்றாடும்படியாகி விட்டது.
’ஏதுடா உங்கிட்ட இந்த நூறு ரூபா.எங்க ஆட்டய போட்ட, உள்ளத சொல்லு’ விசாரணை கமிசன்.
ச்சே..குழாகார காவாலிக டேஞ்சர் டயாபாலிக்கு.
குழாக்கார காவாலி சினேகிதத்தை பெருமையாக நினைக்கிற சல்லிகளும் அன்று இல்லாமல் இல்லை.
கட்டக்கால் குழம்பு கறி கொடுத்து சல்லிகள் அன்னாரை கௌரவிப்பார்கள்.

பத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”

$
0
0

மன நோயாளிகள் துரதிர்ஷ்டசாலிகள் என்பது மிக மலிவான, மேலோட்டமான, எந்திரத்தனமான தேய்ந்த சொல்.
வேறு எந்த நோய்க்கும் குடும்பத்தாரிடம், சமூகத்திடம் மரியாதையுண்டு. ஆனால் மனநோயாளிக்கு குடும்பத்தாரிடம் புறக்கணிப்பும், வெறுப்பும், சமூகத்திடம் ஒரு கிண்டலும், எள்ளலும் தான். கல்லெறிதல் தான்.
Oh let me not be mad, not mad,
Sweet heaven, keeep me in temper, I would not be mad!
- Shakespeare in King Lear
கிங் லியர் மட்டுமல்ல, லேடி மேக்பெத், ஹேம்லட், ஒஃபீலியா என்று ஷேக்ஸ்பியர் தான் எத்தனை மன நோயாளிகளை காவிய பாத்திரங்களாக சித்தரித்திருக்கிறார்.
டேனியல் லிம் எழுதிய ஆங்கில நாவலை பத்மஜா நாராயணன் தமிழில் ‘ஷ்’ இன் ஒலியாக மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சமர்ப்பணம் ’தன் எழுத்தின் வழி துயரைத் தங்காது விரட்டி அடிக்கும் அருமை நண்பன் போகன் சங்கருக்கு’

மொழிபெயர்க்கும்போதே பல முறை அழுதிருக்கிறார். அவருக்கே ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாவலில் வருகிற செங்க் பரவாயில்லை. Harmless person.ஏதோ ஒரு காதல் தோல்வி. வேலைக்கு போகிறவர். ஆரம்ப கட்டத்திலேயே முறையான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தியிருக்க வாய்ப்பிருந்தும் தாயின் மூட நம்பிக்கை மந்திரவாதிகளை தேடுகிறது.

செங்க் மனநிலை பாதிக்கும் போதெல்லாம் அடிக்கடி காணாமல் போகிறவர். ஆனால் அடுத்தவர்களிடம் எந்த வன்முறையையும் பிரயோகித்தவரல்ல. பாவப்பட்ட ஜீவன். அப்படியிருந்தும் ஒரு முறை போலீஸ் மூலம் அவரை கை விலங்கிட்டு காப்பகத்திற்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது.

 Trouble makerஆக, அருவருக்கத்தக்க மனநோயாளியாக தன் தாய் மாமா செங்க் இருந்திருந்தால் டேனியல் லிம் வெறுத்துப்போய் ஒரு வேளை இந்த நாவலையே எழுதியிருந்திருக்க மாட்டார்.

அதனாலேயே நாவலில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. ’ஷ்’இன் ஒலி ஒரு சாத்வீகமான நாவல்.
அவரை தங்கள் வீட்டிலும் டேனியல் லிம்மின் அம்மா வைத்துக்கொண்டிருக்கவில்லை.
முதலில் தன் தாயுடன் பின் ஒரு கறுத்த மனிதருடன் தங்கியிருக்கும் செங்க் தூக்கத்திலேயே கடைசியில் இறந்து போகிறார்.
நாவல் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரை கவனித்துக்கொள்வதில் எதிர்கொள்ள நேர்கிற துயரங்களை பேசுகிறது. செங்கின் சகோதரி படுகிற பாடு. ஒற்றை தலைவலியால் மாத்திரைகள். அதோடு கணவனும் ஒரு ஊதாரி.
இன்னொரு வகையினர் ஆபாசமாக பேசுவது, நிர்வாண கோலத்தில் நடமாடுவது, அராஜக நடவடிக்கைகளில் இறங்குவது, குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தாரிடம் கூட அருவருக்கத் தக்கவகையில் வம்பு செய்வது. இப்படி இருப்பது தான் அந்த குடும்பத்தாருக்கு மிகப்பெரிய துன்பத்தையும், துயரத்தையும் தரக்கூடியது. இப்படிப்பட்டவர்களை குடும்பமே கைவிட்டு விடும். மருத்துவ முகாம்களில் தள்ளி விட்டு விடுவார்க்ள். அல்லது ரோட்டில் பிச்சைக்காரர்களாக திரிவார்கள்.
நல்ல வேளை அந்த வகையில்
Daniel Lim’s maternal uncle was an honourable man.
இதில் மற்றொரு வகையுண்டு. போதைப்பழக்கத்திற்கு அடிமையானதால் மன நோயாளிகளானவர்கள் அல்லது மனநோயாளி போதைப்பழக்கத்திற்கும் அடிமையாவது.
இவர்கள் அபாய நோயாளிகள். மிகுந்த பிரச்னைக்குரியவர்கள். அவர்கள் குடும்பத்தார்க்கு நரக வேதனையை தருபவர்கள். எப்போதும் குடும்பத்தார் மட்டுமன்றி அவரைச்சுற்றியுள்ளவர்கள் கூட கத்தி மேல் நடப்பது போல தவிக்க வேண்டியது தான்.
செங்கின் அம்மா தள்ளாத முதுமையில் தன் மகளுக்கு தான் தொந்தரவாய் இருக்க விரும்பாமல் மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் விடுகிறார்.
மருத்துவ செலவு குறித்த பயத்தில் இன்று முதியவர்கள் பலரும் தற்கொலை தான் தன் சாவு என்று இங்கே முடிவு செய்திருக்கிறார்கள்.
வீட்டு வேலைக்கு போகும் ஒரு முதிய பெண்மணி வேதனையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார் “ அரளி விதைய ரெடியா வச்சிருக்கேன். ஏதாவது பெரிசா உடம்புக்கு வந்து படுக்கும்படியாச்சின்னா அரைச்சி தின்னுட்டு போயிடுவேன். பிள்ளைகளுக்கும் தொந்தரவு வேண்டாம். ஆஸ்பத்திரிக்கும் அநியாயச் செலவு வேண்டாம்.”
மனநிலை பாதிக்கப்பட்ட தன் மூத்த சகோதரி ஒருவர் பற்றி அசோகமித்திரன் கதையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். ’மணவாழ்க்கை’ கதையில் வருகிற அக்கா. அந்த சகோதரி கடைசி வரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே இருந்திருக்கிறார்.
Sometimes the worst place you can be at is in your own head.
பல மன நலக்காப்பகத்தில் உள்ள நோயாளிகள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்கு எப்போதும் பிரம்புத் தாக்குதல் தான்.
ஒரு மருத்துவமனையிலிருந்து (அந்த காலங்களில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்பார்கள்) இருந்து தப்பித்து யூனிஃபார்முடன் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் பரக்க பரக்க விழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு மனநோயாளியை அந்த காப்பக காவலர்கள் ஒரு மிருகத்தை கொண்டு செல்வது போல அடித்து இழுத்துச்சென்றதை பார்த்ததுண்டு.
சித்தப்ரமைக்கு ஆளானவர்கள் பாலியல் வன்முறைக்கும் உள்ளாவதுண்டு.
மனநோயாளியான ஒரு பிச்சைக்காரரை தொடர்ந்து வாய்ப்புணர்ச்சிக்கு
passive sex worker ஆக பயன்படுத்தி குறியை சாந்தப்படுத்திக்கொண்ட குழுவான அயோக்கியர்கள் உண்டு. புத்தி சுவாதினமிழந்த பாவப்பட்ட ஜீவனின் போஜன வாயில் சாமானை திணித்த ஈன ஜென்மங்கள்.
பைத்தியம் பிடித்த முகலட்சணம் இல்லாத பெண் ஒருத்தி. “Cover the face and fire the base” என்று அவள் முகத்தில் துண்டை போட்டு மூடி விட்டு போகம் செய்த படித்த மனிதர்கள் கூட பூலோகத்தில் உண்டு.

மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் R.P.ராஜநாயஹம்

$
0
0

மதுரையில் நாளை ஏப்ரல் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு சேம்பர் ஆஃப் காமெர்ஸில் நடக்கவுள்ள
சங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் 

உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் 
நானும் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அன்பு இளவல் மதுரை பிரபல வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் வரவேற்புரை.

பா.அசோக் அழைப்பின் பேரில் தான் நான் இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் பெரும்பேறு பெற்றேன். அவருடைய சித்தப்பா பி.வரதராசன் அவர்களுடன் அசோக் இணைந்து நடத்தும் விழா.
’வீடு பேறு’அரங்கநாதனின் புதல்வர் தான் நீதியரசர்.
Viewing all 1858 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>