“அம்மாவந்தாள்” நாவல் க.நா.சு வுக்கு பிடிக்காமல் போனது பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் “Thought “மாகசீனில் அவர் அதற்கு விமர்சனம் செய்த போது கொடுத்த தலைப்பு டெல்லி வாழ் இலக்கிய உலகத்திற்கு அதிர்ச்சியை தந்தது.
“Janakiraman’s Mother”
தி.ஜானகிராமன் மனம் என்ன வேதனைப்பட்டிருக்கும்.
கலாப்ரியா கவிதைகள் தி.ஜானகிராமனுக்கு மிகவும் பிடிக்கும்“கலாப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளை கவிதைகள். அல்லது பெண்பிள்ளை கவிதைகள். நிச்சயமாக ‘அலி’ கவிதைகள் அல்ல” பரவசமாய் அன்று சொன்னார். இன்று இப்படி மேற்கோள் காட்டுவதில் தர்மசங்கடம் உண்டு. அரவாணிகள் மனம் புண்பட்டு விடக்கூடாதே.
ஆர்,கே. நாராயண் தன் Guide நாவல் படமாக்கப்பட்டது குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு என்ன தெரியுமா?
“The misguided Guide” இந்த தலைப்பே அவர் மன வியாகுலத்தை தெளிவாக சொல்லி விடுகிறது.
The misguided Guide!
தேவ் ஆனந்த் “ நான் ஒரு நடிகன். தயாரிப்பாளர். உங்கள் நாவலை படமாக்க விரும்புகிறேன். உங்கள் நாவலுக்கு அதன் ஜீவனுக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று தான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
என்னுடைய மால்குடி தென்னிந்தியாவில் ஒரு சின்ன நகரம். இதை எப்படி நீங்கள் இந்தியில் இங்கிலீஷில் கொண்டு வரமுடியும் என்று தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏனென்றால் சத்யஜித் ரே இவரிடம் ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.“ இந்த நாவலின் மால்குடி என்ற கற்பனை ஊர் தென்னிந்திய கலாச்சாரத்தில் ஊறியது. அதன் வேர்களுக்கு பங்கமில்லாமல் இதை படமாக்கமுடியுமா என்று எனக்கு தயக்கமாயிருக்கிறது” ரே நழுவியிருக்கிறார்!
சினிமா ஸ்கிரிப்ட் காட்டப்பட்ட போது நாராயணுக்கு தன் நாவலின் எந்த பகுதியில் இது இருக்கிறது என்ற சந்தேகம். இது ஃபைனல் ஸ்க்ரிப்டில் சரி செய்து கொள்ளலாம் என்று டைரக்டர் சமாதானப்படுத்தியிருக்கிறார்.விந்தை என்னவென்றால் படைப்பாளி பார்வைக்கு ஃபைனல் ஸ்கிரிப்ட் வரும்போது பல காட்சிகள் ஷூட் செய்து விட்டார்கள்!
சினிமாக்காரர்கள் நாராயணிடம் அப்புறம் சொன்னது. Sky is the limit.சினிமாவுக்காக எதையும் செய்வோம்.
மால்குடியை ஜெய்ப்பூரிலும் உதய்பூரிலும் தான் காட்சிப்படுத்த முடிவு செய்து விட்டார்கள். மால்குடி என்பது சினிமாவுக்கு காஷ்மீர், ராஜஸ்தான், பாம்பே என்று எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும் என்று சொல்லிவிட்டார்கள்.
படத்தை பார்த்த இந்திராகாந்தியே கேட்டிருக்கிறார்.“ ஏன் மால்குடியை காட்டாமல் படத்தை Travelogueஆக்கி விட்டார்கள்? “
படம் இந்தியில் தயாரிக்கப்பட்டதோடு இதன் American verson நோபல் பரிசு பெற்ற பேர்ல் எஸ்.பக் திரைக்கதை வசனத்தில் வேறு வந்தது என்பது ஒரு முரண் நகை!
தேவ் ஆனந்த் ராஜுவாக,வஹிதா ரஹ்மான் நாட்டிய கலைஞர் ரோஸியாக எஸ்.டி.பர்மன் இசையில் வெளி வந்து சக்கைப் போடு போட்டது. தேவ் ஆனந்த் தம்பி விஜய் ஆனந்த் தான் டைரக்டர்.
ஆனால் ஆர்.கே. நாராயண் தவிப்பு “ என் நாவல் எங்கே? என் மால்குடி எங்கே?என்னுடைய ராஜு எங்கே? ரோஸி எங்கே?”
https://www.facebook.com/rprajanayahem/posts/1589103541303106?pnref=story